Home நாடு இராமச்சந்திரன் மீதான தாக்குதல்: 3 பேர் கைது!

இராமச்சந்திரன் மீதான தாக்குதல்: 3 பேர் கைது!

1331
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,   கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் இதுவரையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

45 வயது முதல் 51 வயதுக்குட்பட்ட அவர்கள் மூவரும் செபராங் பிறை வட்டாரத்தில் கைது செய்யப்பட்டனர் என காவல் துறை அறிவித்திருக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட அம்மூவரும் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

இதுவரையில் 14 சாட்சிகளிடம் காவல் துறையினர் வாக்கு மூலம் பெற்றிருக்கின்றனர்.

#TamilSchoolmychoice

விசாரணைகள் தொடர்ந்து வருவதால் இப்போதைக்கு இந்தத் தகவல்களை மட்டுமே வழங்க முடியும் என பினாங்கு காவல் துறைத் தலைவர் அறிவித்திருக்கிறார்.

இராமச்சந்திரன் தாக்கப்பட்ட விவகாரம்

பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன், கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

அன்று மாலையில் அவர் தனது காரில் இருந்து இறங்கியவுடன், அவரின் வீட்டின் முன்னால் அவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். 70 வயதான டத்தோ இராமாவின் உடலில்  ஆழமான வெட்டுக் காயங்கள் பதிந்துள்ளன. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

பினாங்கு துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி இராமச்சந்திரன் தாக்கப்பட்ட இந்த விவரங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

தாக்குதல் குறித்து இராமச்சந்திரன் குடும்பத்தினர் காவல் துறையில் புகார் செய்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் குறித்துக் கருத்துரைத்த இராமசாமி “பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களுக்கு சேவை செய்வதற்கான முன்னணி அமைப்பாக அறப்பணி வாரியத்தை வலுப்படுத்துவதில் இராமச்சந்திரன் தனது நிலைப்பாட்டில் சிறந்து விளங்கினார். டத்தோ இராமாவிற்கு எதிரான தாக்குதல் பினாங்கு அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதலாகும். பினாங்கு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டுவேன். தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் கோழைகளுக்குப் பயப்படப்போவதில்லை என நான் பினாங்கு இந்தியர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.