Home நாடு சாஹிட் ஹாமிடி கீழே  விழுந்து காயம் – வழக்கு ஒத்திவைப்பு

சாஹிட் ஹாமிடி கீழே  விழுந்து காயம் – வழக்கு ஒத்திவைப்பு

805
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அம்னோ தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹாமிடி கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 22) கீழே விழுந்ததால் முதுகுப் பகுதியில் அடிபட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஊழல் வழக்கில் இதன் காரணமாக நேற்று (ஆகஸ்ட் 24) அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

47 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டு அந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வழக்கின் விசாரணை நேற்றும் தொடர்ந்தது.

#TamilSchoolmychoice

ஆனால், சாஹிட் நேற்று நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவரின் சார்பில் அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சாஹிட் சிகிச்சை பெற்று வரும் தகவல்களைத் தெரிவித்தார்.

வழக்கைத் தொடர்ந்து நடத்தத் தாங்கள் தயாராக இருப்பதாகத் தெரிவித்த சாஹிட் ஹாமிடியின் வழக்கறிஞர்கள், எனினும் குற்றம் சாட்டப்பட்ட சாஹிட் நீதிமன்றத்தில் இருக்க வேண்டுமா அல்லது அவர் இல்லாமலே விசாரணையைத் தொடரலாமா எனக் கேட்டனர்.

அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் வழக்கு ஒத்திவைப்புக்கு ஆட்சேபம் தெரிவித்தனர். பலமுறை இவ்வாறு ஒத்திவைப்புகள் நடைபெற்றுவிட்டன என்பதையும் அவர்கள் சுட்டிக் காட்டினர்.

இதைத் தொடர்ந்து, சாஹிட்டின் மருத்துவர் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 25) நீதிமன்றத்திற்கு வருகை தந்து சாஹிட்டின் உடல்நலம் குறித்தும், வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் விளக்கம் தர வேண்டுமென வழக்கை விசாரிக்கும் நீதிபதி கோலின் லாரன்ஸ் செகுயிரா உத்தரவிட்டார்.