Home நாடு நஜிப் : இப்போதைக்கு சிறைவாசம் இல்லை!- கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வரை பிணையில் இருக்கலாம்!

நஜிப் : இப்போதைக்கு சிறைவாசம் இல்லை!- கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்பு வரை பிணையில் இருக்கலாம்!

959
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : எஸ்.ஆர். சி. இன்டர்நேஷனல் தொடர்பான வழக்கில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நஜிப் துன் ரசாக்குக்கு விதித்த 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை, 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை இன்று புதன்கிழமை (டிசம்பர் 8) மேல்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் நிலைநிறுத்தியது.

எனினும், தீர்ப்பு வந்தவுடனேயே அவர் கூட்டரசு நீதிமன்றத்தில் தனது மேல்முறையீட்டுக்கான முன்னறிவிப்பு மனுவை (நோட்டீஸ்) சமர்ப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து அவரின் வழக்கறிஞர்கள், கூட்டரசு நீதிமன்றத்தில் தாங்கள் செய்யவிருக்கும் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை நஜிப் மீதான தண்டனையை அமுல்படுத்தாமல் நிறுத்தி வைக்க வேண்டுமென விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்தனர்.

#TamilSchoolmychoice

அந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டமேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்றம் நிர்ணயித்திருக்கும் பிணைத் தொகை, நிபந்தனைகள் ஆகியவற்றை நஜிப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டனர்.

அப்துல் கரிம் அப்துல் ஜலீல் (Abdul Karim Abdul Jalil) தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏகமனதாக இந்த முடிவை எடுத்தது.

இதைத் தொடர்ந்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான நஜிப்பின் மேல்முறையீடு, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு முடிவுக்கு வருகிறது.

இனி தண்டனையிலிருந்தும் சிறை செல்வதிலிருந்தும் தப்புவதற்கு அவருக்கு இரண்டு இறுதிக்கட்ட வாய்ப்புகள் இருக்கின்றன.

கூட்டரசு நீதிமன்றத்தில் அவர் செய்யப்போகும் மேல்முறையீட்டில் அவர் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது முதலாவது வாய்ப்பாகும்.

கூட்டரசு நீதிமன்றத்தில் அவர் மீண்டும் தன் மேல்முறையீட்டில் தோல்வியடைந்தால், இரண்டாவது வாய்ப்பாக – இறுதிக் கட்டமாக – மாமன்னரின் அரச மன்னிப்பைப் பெறுவது! ஆனால் அதற்கு அவ்வாறு அரச மன்னிப்புக்கான மேல்முறையீடு செய்யும்போது ஆளும் மத்திய அரசாங்கம் அந்த விண்ணப்பத்திற்கான முழு ஆதரவை வழங்க வேண்டும்.