Home நாடு அசாம் பாக்கி மீது காவல் துறை விசாரணை : பங்குச் சந்தை ஆணையத்திற்கு புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டன

அசாம் பாக்கி மீது காவல் துறை விசாரணை : பங்குச் சந்தை ஆணையத்திற்கு புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டன

705
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பல்வேறு ஊழல் புகார்களில் சிக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவர் டான்ஶ்ரீ அசாம் பாக்கி மீது கோலாலம்பூரிலுள்ள ஜாலான் டாங் வாங்கி காவல் நிலையத்தில் பக்காத்தான் ஹாரப்பான் தலைவர்கள் புகார்கள் செய்துள்ளனர்.

இந்தப் புகார்களை காவல் துறை, பங்குச் சந்தை ஆணையத்திற்கு மேல் விசாரணைக்காக அனுப்பி வைத்துள்ளது. மலேசிய பங்குச் சந்தை ஆணையம் சட்டங்களின்படி அசாம் பாக்கி விசாரிக்கப்படுவதாக புக்கிட் அமான் குற்றவியல் பிரிவின் (சிஐடி- CID) இயக்குநர் அப்துல் ஜாலில் ஹாசான் தெரிவித்தார்.

பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பல நிறுவனங்களில் பங்குகளை வைத்திருப்பதாக ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கிக்கு எதிராகப் புகார்கள் எழுந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து பல்முனைகளிலும் அவருக்கு எதிரான கண்டனக் குரல்களும் நடவடிக்கைகளும் எழுந்திருக்கின்றன. அவர் மீதான விசாரணை இடையூறுகளின்றி நடைபெற, அவர் தனது பதவியில் இருந்து விடுமுறையில் செல்ல வேண்டும் என்ற அறைகூவல்களும் எழுந்திருக்கின்றன.

நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக தீர்மானம் முன்மொழியப்பட்டிருக்கிறது.

ஏறத்தாழ 2 மில்லியன் பங்குகளை அசாம் பாக்கி வைத்திருக்கிறார் என்ற புகார் எழுந்ததைத் தொடர்ந்து, எப்படி வந்தது அவருக்கு இந்தப் பணம்? ஓர் அரசாங்க ஊழியரான அவர் இந்தப் பங்குகள் வைத்திருப்பதை அரசாங்கத்திற்குத் தெரிவித்திருக்கிறாரா? என்பது போன்ற கேள்விகள் எழுந்தன.

இந்தப் பங்குகள் யார் மூலமாக அவர் பெற்றார்? அவரின் வருமானம் மூலம் இவ்வளவு பெரிய தொகையைத் திரட்டி அவரால் பங்குகளை வாங்க முடியுமா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியிருக்கின்றனர், பிகேஆர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

இதற்கிடையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை, ஊழல் தடுப்பு மன்றத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வந்த பொருளாதார நிபுணர் எட்மண்ட் டெரென்ஸ் கோமஸ், அசாம் பாக்கி மீதான புகார்கள் தொடர்பில் தனது பதவியிலிருந்து விலகினார்.

இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத் தேர்வுக் குழு அசாம் பாக்கி மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை, ஊழல் தடுப்பு மன்றம் விடுத்த அறிக்கையில் அசாம் பாக்கியின் சகோதரரே அந்த பங்குகளை வைத்திருக்கிறார் என்றும் அசாம் பாக்கி தவறுகள் ஏதும் இழைக்கவில்லை என்றும் அறிவித்தது.

அந்த அறிக்கையும் சர்ச்சைகளுக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் ஆலோசனை, ஊழல் தடுப்பு மன்றத்தின் மற்ற உறுப்பினர்கள் ஆலோசனை மன்றத்தின் தலைவர் அபு சாஹாரின் அறிக்கையில் தங்களுக்கு சம்பந்தமில்லை என ஒதுங்கிக் கொண்டுள்ளனர்.