Home நாடு “நூர் ஹிஷாமை மாற்றுங்கள் – கைரி தெளிவான வியூகங்கள் கொண்டிருக்கிறாரா?” – பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினரின்...

“நூர் ஹிஷாமை மாற்றுங்கள் – கைரி தெளிவான வியூகங்கள் கொண்டிருக்கிறாரா?” – பிந்துலு நாடாளுமன்ற உறுப்பினரின் எதிர்ப்புக் குரல்

742
0
SHARE
Ad
தியோங் கிங் சிங்

பிந்துலு, ஜன 10 : சுகாதார இலாகாவின் தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ நூர் ஹிஷாம் அவரின் பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வேறு ஒருவர் கோவிட்-19 பிரச்சனைகளைக் கையாள நியமிக்கப்பட வேண்டும் என சரவாக் பிந்துலு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் தியோங் கிங் சிங் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

எதையும் துணிச்சலுடன் பகிரங்கமாக எடுத்துரைப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர் தியோங் கிங் சிங். சீனாவுக்கான சிறப்புத்தூதராகவும் தியோங் பதவி வகித்து வருகின்றார்.

நூர் ஹிஷாமுக்கு எதிராகக் கடுமையானக் கண்டனக் குரலை தியோங் கிங் சிங் எழுப்புவது இது முதன் முறையல்ல! கோவிட்-19 தொற்றுகள் உச்ச கட்ட எண்ணிக்கையில் இருந்தபோது “நூர் ஹிஷாம் ஏன் இன்னும் சபாவுக்கு வரவில்லை? மரணமடைவதற்கு அஞ்சுகிறாரா?” எனக் கடுமையான வார்த்தைகளால் சாடியவரும் இதே தியோங் கிங் சிங்தான்!

#TamilSchoolmychoice

“நூர் ஹிஷாம் ஓர் அறுவைச் சிகிச்சை மருத்துவ நிபுணர்தான். அவருக்கு பொது சுகாதாரத் துறையில் அனுபவமில்லை. எனவே, பொது சுகாதார மிரட்டலாக உருவெடுத்திருக்கும் கோவிட் 19-ஓமிக்ரோன் தொற்றுகளுக்கு எதிரான போராட்டத்தில் அவர் இனியும் முக்கிய நபராகத் தலைமை தாங்கிக்கொண்டிருப்பது சரியா என நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்” எனவும் தியோங் கேள்வி எழுப்பினார்.

இதனால்தான், கோவிட் தொற்று பாதிப்பில் சீனா கொண்டிருக்கும் அனுபவத்தின் மூலம் அவர்கள் வழங்கும் ஆலோசனைகளைப் பெற நூர் ஹிஷாம் தலைமையிலான குழுவினர் இன்னும் மறுத்து வருகின்றனர் என்றும் தியோங் சுட்டிக்காட்டினார்.

கைரி ஜமாலுடினுக்கு தெளிவாக வியூகங்கள் இருக்கிறதா?

கைரி ஜமாலுடின்

அதே வேளையில் சுகாதார  அமைச்சர் கைரி ஜமாலுடினையும் சாடியிருக்கிறார் தியோங்.

மிக மோசமான கட்டத்தை கோவிட்-19 தொற்றுப் பரவல் அடைந்தால் அதை எதிர்கொள்ள என்ன வியூகங்களைக் கொண்டிருக்கிறார் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் என்றும் தியோங் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதை விடுத்து ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு அடியாக எடுத்து வைப்பதிலேயே கைரி கவனம் செலுத்துகிறார் என தியோங் இன்று விடுத்திருக்கும் அறிக்கையில் சுட்டிக் காட்டினார்.

ஓமிக்ரோன் தொற்றுப் பரவலால் சில ஐரோப்பிய நாடுகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்திருப்பதை கைரி உணர்ந்திருக்கிறாரா என்றும் தியோங் கேள்வி எழுப்பினார்.