Home உலகம் ஸ்டாலின் சர்ச்சை : எடப்பாடியாருக்கு துபாயிலிருந்து தங்கம் தென்னரசு பதில்

ஸ்டாலின் சர்ச்சை : எடப்பாடியாருக்கு துபாயிலிருந்து தங்கம் தென்னரசு பதில்

561
0
SHARE
Ad
துபாய் முதலீட்டாளர்கள் நிகழ்ச்சியில் ஸ்டாலினுடன் தங்கம் தென்னரசு (இடது பக்கம்)

துபாய் : இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எக்ஸ்போ 2020  கண்காட்சியில் கலந்து கொள்வதற்கும், முதலீட்டாளர்களை தமிழ்நாட்டுக்கு ஈர்க்கும் நோக்கிலும் வருகை மேற்கொண்டிருக்கும் மு.க.ஸ்டாலின் குறித்து எடப்பாடி பழனிசாமி எதிர்மறையானக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

அதற்கு துபாயிலிருந்து காணொலி ஒன்றை வெளியிட்டு பதிலளித்திருக்கிறார் ஸ்டாலினுடன் துபாய் சென்றிருக்கும் தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு.

“எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் மேற்கொண்டுள்ள துபாய் வெளிநாட்டு பயணம் குறித்து,  விமர்சனம் செய்துள்ளார். முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம், தனி விமானத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பது என்பது, துபாய் பயண நேரத்தில், விமான வசதி கிடைக்காத காரணத்தால்தான் தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனி விமானத்திற்கு கூட, திராவிட முன்னேற்றக் கழகம் தான் அதற்கான செலவுகளை ஏற்றுக் கொண்டிருக்கிறது. அரசாங்கத்தின் நிதி செலவழிக்கப்படவில்லை. இரண்டாவதாக, அவர் குடும்பச் சுற்றுலா மேற்கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். முதலமைச்சரின் இந்தப் பயணம், முதலீடுகளை ஈர்ப்பதற்காக மட்டுமல்ல, கடைக்கோடி தமிழகத்தில் இருந்து இங்கு வந்து வேலை செய்து, உழைத்துக் கொண்டிருக்கக் கூடிய, ஒவ்வொரு தமிழ் குடும்பத்தினுடைய வளர்ச்சிக்காகவும், வாழ்விற்காகவும், அவர் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். அதனை நேற்று நடந்த நிகழ்ச்சியில் இங்கு வந்திருக்கக்கூடிய தமிழ் சமுதாயம், அவருக்கு அளித்த வரவேற்பில் இருந்து நாட்டு மக்கள் உணர்ந்துக் கொண்டிருக்கிறார்கள்” என தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

உலக வர்த்தக பொருட்காட்சி என்பது முடிவுறும் தருவாயிலே முதலமைச்சர் வந்திருக்கிறார் என எடப்பாடி பழனிசாமி முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த தென்னரசு, “இது கோவிட் காரணமாக தள்ளிப்போய் வந்துள்ளது; கண்காட்சி ஆரம்பிக்கும் போது கூட, இதற்கு வரவேற்பில்லை; முடியும் போதுதான் மிகப்பெரிய கூட்டம் இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில்தான் உலகின் பல பகுதிகளிலும் இருந்து பார்வையாளர்கள் இங்கு வருகிறார்கள். எனவே, இந்த சமயத்தில் வந்து திறந்து வைப்பது தான் சரியான வாய்ப்பாக இருக்கும் என்பதை உணர்ந்து தான் முதலமைச்சர், இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டிருப்பதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.