Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : “இறைவி திருமகள் காடு” – படக் குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : “இறைவி திருமகள் காடு” – படக் குழுவினருடன் சிறப்பு நேர்காணல்

490
0
SHARE
Ad

அண்மையில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளிபரப்பாகி பரவலான பாராட்டுகளைப் பெற்ற தொடர் “இறைவி திருமகள் காடு”. அந்தத் தொடரை இதுவரை காணாதவர்கள் எப்போதும்  ஆஸ்ட்ரோ ஒன் டிமாண்டில் கண்டு மகிழலாம்.

அந்தத் தொடரில் பணியாற்றிய படக் கலைஞர்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்:

எஸ்.டி . புவனேந்திரன், இயக்குநர்:

இறைவி திருமகள் காடு தொடரை இயக்கியதன் பின்னணியில் உள்ள உங்களின் உத்வேகம் என்ன?

#TamilSchoolmychoice

அறிவியலுக்கும் புனைக்கதைக்கும் இடையிலான மோதலைக் கொண்டிருப்பதால், கதைக்களம் மிகப்பெரிய உத்வேகமாக இருந்தது. ‘எப்போதும் முடிவடையாத’ ஆன்மீகம் மற்றும் அறிவியல் ஆய்வுகள் ஆர்வத்தைத் தூண்டியது. ‘மர்மதேசம்’, ‘விடாது கருப்பு’, ‘ருத்ர வீணை’ மற்றும் ‘சிதம்பர ரகசியம்’ போன்ற முந்தையத் தொலைக்காட்சித் தொடர்கள் எங்களுக்கு வழிகாட்டியாக அமைந்தன.

இறைவி திருமகள் காடு தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

குறிப்பிடத்தக்க அம்சங்களைக் கொண்ட ஓர் ஆலயம் கதைக்கு இன்றியமையாத ஓர் அங்கமாக இருந்தது. அவ்வகையில், ஜெராமில் அமைந்துள்ள ஸ்ரீ மேல் மலையனூர் அங்காளப் பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தைக் கண்டறிந்தப்போது, அது தொடரின் முக்கிய ஈர்ப்பாக மாறியது. அவ்வாலயத்தில் படப்பிடிப்பை நடத்த ஆசியும் அனுமதியும் பெற்றது என்றென்றும் நிலைத்திருக்கும் மிக முக்கிய நினைவாக இருந்தது.

இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

ஆன்மீக மர்மத் திரில்லர், உள்ளூர் உள்ளடக்கத்திற்குப் புதிய அங்கம் என்பதால் வயது வரம்பின்றி அனைத்து இரசிகர்களையும் இந்தத் தொடர் சென்றடைந்திருக்கும் என நம்புகிறேன். எதிர்க்காலத்தில் இதுபோன்றப் புதிய வகையானத் தொடர்களுக்கு இது பிள்ளையார் சுழியாக அமையும்.

வினோஷன், செல்லினா ஜெய், மூன் நிலா & செயிண்ட் டிஎஃப்சி, நடிகர்கள்:

இறைவி திருமகள் காடு தொடரில் நீங்கள் வகித்தக் கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கூறுங்கள்?

வினோஷன் – இறைவி

வினோஷன்: பத்திரிகையாளர் மற்றும் மூத்தப் புகைப்படக் கலைஞர் பணியிலிருந்து நீக்கப்பட்டப் பிறகு, தனது நண்பரான அம்சாவுடன் இணைந்து யூடியூப் வழியாக தகவல்கள் நிறைந்த உள்ளடக்கத்தை உருவாக்கத் திட்டமிடும் ‘கைரவ்’ என்றக் கதாப்பாத்திரத்தில் நடித்தேன். இவ்வாறு, அவர் 200 ஆண்டுகள் பழமையான மர்மத்தைத் தீர்க்க முயற்சிக்கிறார்.

‘கைரவ்’ கதாப்பாத்திரம் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. ஏனெனில், அது எனது உண்மையானக் குணத்தைப் பிரதிப்பலிக்கிறது. எனவே, இக்கதாப்பாத்திரத்தைச் செவ்வென நடிக்க முடிந்தது. ஊடகத்துறையில் தனக்கு இருந்த விரிவான அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்தி அம்சாவிற்குக் கைரவ் உதவுகிறார். மகளிர் சக்தியில் நம்பிக்கைக் கொண்ட அம்சாவின் விசுவாசமான நண்பன்.

செல்லினா – இறைவி

செல்லினா: நான் அம்சாவாக நடித்தேன். தைரியமான மற்றும் உறுதியானப் பெண் என்பதால் இந்தக் கதாப்பாத்திரத்தில் நடிக்க ஆர்வமாக இருந்தேன். அம்சா, ஒரு சந்தேகக் குணம் கொண்ட தைரியமானப் பத்திரிகையாளர் என்று நான் கூறுவேன்.

மூன் நிலா: வயதானப் பெண் உட்பட ஒன்பது வித்தியாசமானக் வேடங்களில் நடித்ததால் இந்தத் தொடரில் எனது கதாப்பாத்திரங்கள் மிகவும் சவாலாக அமைந்தன.

மூன் நிலா – இறைவி

பண்பேற்றம், தோற்றம் மற்றும் குணாதிசயம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்பது கதாப்பாத்திரங்களையும் சிறப்பாக நடிக்க நான் பல முயற்சிகளைச் செய்தேன். மேலும், ஒரு பக்தித் தொடருக்கு என்னைத் தயார்படுத்த 100 நாட்கள் நான் சைவமாக இருந்தேன். இக்கதாப்பாத்திரங்கள் என் கனவு மற்றும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவை என்றுதான் நான் கூறுவேன். நான் எனது சிறந்ததைக் கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

செயிண்ட் – இறைவி

செயிண்ட்: நடிப்புத்துறையில் எனது முதல் கதாப்பாத்திரம், மனோகர். எனவே, மிகவும் சவாலாக இருந்தது. அவர் ஒரு பெருநிறுவன நபர், பழிவாங்கும் குணம் கொண்ட நாத்திகர், ஒரு தந்தை, ஓர் அன்பானக் கணவர், ஒரு விசுவாசமானப் பணியாளர் மற்றும் அவரதுச் சுயக் கொள்கைகளுக்குள் வாழும் ஒரு மனிதர். தவறுகள் ஏதெனும் ஏற்பட்டால் மனோகரின் பயணத்திற்கு நியாயமாக இருக்காது என்பதைக் கருத்தில் கொண்டு நான் பல முயற்சிகளில் ஈடுபட்டேன்.

இறைவி திருமகள் காடு தொடரில் நடித்த உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்?

வினோஷன்: அனுபவம் வேடிக்கையாக இருந்தது. நான் சுமார் 10 வருடங்களாக இத்துறையில் இருக்கிறேன். ஆனால், எஸ்.டி.புவனேந்திரன் இயக்கத்தில் முதன்மைக் கதாப்பாத்திரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை. நான் அதை மிகவும் இரசித்தேன். அவரது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு திறமையாளர்களிடமிருந்துச் சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் இயக்குநரின் பாணி மிகவும் சுவாரசியமாகவும் நுண்ணறிவுமிக்கதாகவும் இருந்தது. நடிப்புத் தவிர, கூடுதல் தகவல்களையும் அறிவையும் பெற்றேன். என்னுடைய சக நடிகரானச் செல்லினா ஒரு கடுமையான போட்டியாளராக இருந்தார். மேலும், செல்லினாவின் நடிப்புக்கு இணையாக என்னால் இயன்றச் சிறந்த நடிப்பைக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

செல்லினா: நடிப்புத்துறையில் எனது முதல் கதாப்பாத்திரம் என்பதால் மிகவும் சவாலாக இருந்தது. கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப உடல் பாணியை வளர்த்துக்கொள்வது, நீண்ட மற்றும் உண்மைகளைக் கொண்ட உரையாடல்களைப் பேசுவது ஆகியவை நான் எதிர்கொண்டச் சிலச் சவால்களாகும்.

இருப்பினும், எஸ்.டி.புவனேந்திரன், அவரது குழுவினர் மற்றும் எனதுச் சக நடிகரான வினோஷன் ஆகியோரின் வழிகாட்டுதலால் என்னால் சிறப்பாக நடிக்க முடிந்தது – இவ்வேளையில் அவர்களுக்கு நன்றிக் கூறக் கடமைப்பட்டுள்ளேன்.

மூன் நிலா – இறைவி

மூன் நிலா: இந்தத் தொடரில் நடிகர் மற்றும் உதவி இயக்குநர் என இரு பணியில் ஈடுப்பட்டேன். இரசிகர்களிடமிருந்து எனது நடிப்புக்கு நேர்மறையானக் கருத்துகளையும் பாராட்டுகளையும் பெற்றேன். நான் நடித்தக் கதாப்பாத்திரங்களை அவர்கள் விரும்பி இரசித்ததுத் தெரிந்தது. இறைவி திருமகள் காடு தொடரில் பணியாற்றியது, உண்மையிலேயே பிரபஞ்சம் மற்றும் எல்லாம் வல்ல இறைவனின் ஆசீர்வாதம் என்றுதான் நான் கூறுவேன்.

செயிண்ட்: நடிகராக இது என்னுடைய முதல் தொடர். நான் கதையை நேசித்ததோடு அதை உயிர்ப்பித்ததையும் இரசித்தேன். நடிப்புத்துறையில் எனது முதல் முறையிலேயே அற்புதமானத், திறமையான மற்றும் பழம்பெரும் மலேசிய நடிகர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஒவ்வொருவருடனும் நடித்தது மறக்க முடியாதத் தருணங்களாக என் மனதிலும் இதயத்திலும் பதிந்துவிட்டது.