Home நாடு 2020-இல் ஏன் பிரதமராக முடியவில்லை? அன்வார் மீண்டும் விளக்கம்

2020-இல் ஏன் பிரதமராக முடியவில்லை? அன்வார் மீண்டும் விளக்கம்

343
0
SHARE
Ad

கோலாலம்பூர் : 2020ஆம் ஆண்டில் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் ஏன் தன்னால் பிரதமராக முடியவில்லை என்பதற்கான விளக்கத்தை மீண்டும் ஒரு முறை வழங்கியிருக்கிறார் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.

மலேசியா கினி இணைய ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் டத்தோஸ்ரீ அன்வார் 2020-இல் நடைபெற்ற சம்பவங்களை விவரித்தார்.

தனக்கு ஆதரவு வழங்கிய 120 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 பேர் அம்னோவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கியிருந்த அகமட் சாஹிட் ஹமிடியும் நஜிப் துன் ரசாக்கும் இருந்தனர் என அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“ஆனால், பக்கத்தான் ஹராப்பான் கூட்டணித் தலைவர்கள் நஜிப்-சாஹிட் இருவரிடமிருந்து நான் பிரதமராவதற்கு சத்தியப் பிரமாண ஆதரவு கடிதங்களைப் பெறுவதற்கு ஒப்புத் கொள்ளவில்லை. நான் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர்களின் வழக்குகளில் தலையிடவும் மறுத்துவிட்டேன்.
இது பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கும் நன்கு தெரியும். ஆனால், அதை அப்போது பகிரங்கமாக நாங்கள் தெரிவிக்கவில்லை. அப்போது பலரின் கேலிக்கும் கிண்டலுக்கும் கூட, நான் ஆளானேன். ஆனால், இப்போது அனைவருக்கும் உண்மை தெரிந்துவிட்டது. என்னைக் கிண்டல் செய்தவர்கள் இப்போது என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். பக்கத்தானும் நானும் எங்களின் நேர்மையிலும் கொள்கையிலும் எப்போதுமே ஒரே மாதிரியாக நடந்து கொண்டோம்” என்றும் அன்வார் மலேசியாகினி நேர்காணலில் குறிப்பிட்டார்.

“பின்னர் நானே மாமன்னரிடம் அம்னோவின் நிலைப்பாடு குறித்து எடுத்துக் கூறினேன். உங்களிடம் சத்திய பிரமாணம் கடிதங்கள் கொடுத்துவிட்டு பிறகு அவர்களே அதை மாற்றிக் கொள்கிறார்கள். தங்களின் கடப்பாடுகளிலிருந்து பின்வாங்குகிறார்கள். மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என மாமன்னரிடம் நான் கூறினேன்” என்றும் அன்வார் தெரிவித்திருக்கிறார்.