Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : வீரா தொலைக்காட்சித் தொடர் கலைஞர்களுடன் நேர்காணல்

ஆஸ்ட்ரோ : வீரா தொலைக்காட்சித் தொடர் கலைஞர்களுடன் நேர்காணல்

416
0
SHARE
Ad

(அண்மையில் ஆஸ்ட்ரோ விண்மீன் அலைவரிசையில் ஒளியேறிய தொலைக்காட்சித் தொடர் ‘வீரா’ நேயர்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அந்தத் தொடரில் பங்கு பெற்ற கலைஞர்களுடன் நடத்தப்பட்ட நேர்காணல்)

எம்.எஸ் பிரேம் நாத், இயக்குநர்:

எம்.எஸ்.பிரேம்நாத்

1. வீரா தொடரை இயக்கியதற்கான உங்களின் உத்வேகம் என்ன ?

வீரா தொடர் கதைக்களத்தின் ஆரம்பப் பகுதிகள், 1950-களில் புந்தோங்கைச் சேர்ந்த ஜோ டைமன் என்று அழைக்கப்படும் மலேசியக் குத்துச்சண்டை வீரரை மையமாகக் கொண்டது என்று நான் கூறுவேன். பல வருடங்களுக்கு முன் அவரை நேரில் சந்திக்கும் ஓர் அரிய வாய்ப்புக் கிடைத்தது. இந்தக் கதை முதலில் ஒரு திரைப்படத்திற்காக உருவாக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இருப்பினும், பின்னர் ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202)-க்காக 22 அத்தியாயங்கள் கொண்டத் தொடரைத் தயாரிக்க கதையை ஃபீனிக்ஸ் பிலிம்ஸுக்கு வழங்க முடிவு செய்தேன். கலப்புத் தற்காப்புக் கலைகளை (எம்எம்ஏ) முதன்மையாகக் கொண்ட முதல் உள்ளூர் தமிழ் தொடர் இது என்று என்னால் நம்பிக்கையுடன் கூற முடியும்.

2. வீரா தொடரை இயக்கிய உங்களின் குறிப்பிடத்தக்க நினைவுகளைப் பகிர்ந்துக் கொள்ளவும்.

முன்னணி நடிகர்களான  தீபன் கோவிந்தசாமி, ஷர்மேந்திரன் ரகோநாதன் உட்ப்பட இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து விளையாட்டு வீரர்களும் உண்மையான விளையாட்டு வீரர்களாவர். வீரர்கள் என்பதால் சண்டைக் காட்சிகளை மிகவும் யதார்த்தமான முறையில் இரசிகர்கள் இரசிக்கலாம். இந்தத் தொடரில் சர்வதேச நடிகரான திரு.மதியழகனை நடிக்க வைக்கும் பாக்கியம் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்

தீபன் கோவிந்தசாமி & ஷர்மேந்திரன் ரகோநாதன், நடிகர்கள்:

1. இந்தத் தொடரில் உங்களின் கதாப்பாத்திரத்தைப் பற்றிக் கூறுவதோடு நிஜ வாழ்க்கையில் உங்களின் கதாப்பாத்திரத்தின் சிலப் பகுதிகளை உங்களால் தொடர்புப்படுத்த முடிந்தால் அவற்றைப் பற்றியும் கூறுங்கள்.

தீபன் கோவிந்தசாமி

தீபன்: நான் ‘வீரா’ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். அவரது தந்தை அவரையும் அவரது தாயையும் விட்டுச் சென்றதிலிருந்து எப்போதும் குடும்பத்தின் தலைவராக இருந்தார். அரங்கில் தனதுத் திறமையைப் பயன்படுத்தி, வறுமையிலிருந்தும் கடனிலிருந்தும் விடுபட முயற்சித்தார். அவர் தனது வழிகளில் கவனம் செலுத்தினார். அதை யாராலும் மாற்ற முடியாது.

நான் ஒரு தற்காப்புக் கலை வீரர் என்பதால் இந்தக் கதாப்பாத்திரத்துடன் என்னால் நிறையத் தொடர்புப்படுத்த முடியும். ஆனால், வீராவின் குழந்தைப் பருவம் மிகக் கொடூரமானதாக இருந்ததால், நிறையக் கோபம் அவருக்குள் வந்துவிட்டது.

ஷர்மேந்திரன்

ஷர்மேந்திரன்: இந்தத் தொடரில் வீராவின் தம்பியாகப் ‘பரத்’ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன். இந்தத் தொடரில் நீங்கள் காணும் பயிற்சி, போட்டி அம்சம் எனது நிஜ வாழ்க்கையைத் தொடர்புப்படுத்துகிறது. ஒரே வித்தியாசம் என்னவென்றால், நிஜ வாழ்க்கையில் நான் ஒரு தேசியக் கராத்தே விளையாட்டு வீரர், ஆனால் வீரா தொடரில் எம்எம்ஏ சாம்பியன்ஷிப்பில் போட்டியிடும் ஒரு திறமையானத் தற்காப்புக் கலை வீரர்.

2. வீரா தொடரில் நடித்த அனுபவம் எப்படி இருந்தது?

தீபன்: நான் இதுவரை நடித்தக் கடினமானக் கதாப்பாத்திரங்களில் இதுவும் ஒன்று. சண்டைக் காட்சிகள் மட்டுமே மிகவும் சவாலாக இருந்தன. எனவே, சிறப்பானப் படைப்பை வழங்க முழு உடல் வலிமைத் தேவை. நான் வீரா தொடரில் சண்டை இயக்குநராகவும் பணியாற்றினேன்.

தீபன் கோவிந்தசாமி

மேலும், பிரேமுடன் (இயக்குநர்) இணைந்து சண்டைக் காட்சிகளின் இயக்கத்திலும் நான் உதவினேன். அதுவே, ஒரு வேடிக்கையான அனுபவமாக இருந்தது. நிறைய ஆக்கப்பூர்வமான வேலைகளைச் செய்து முடிக்க முக்கியப் படப்பிடிப்பிற்கு முன் நாங்கள் பல வாரங்களைச் செலவழித்தோம்.

அனைத்து வீரர்கள்/நடிகர்கள் ஒரே நோக்கத்தில் இருப்பதை உறுதி செய்தோம். நான் ஏன் இந்த விளையாட்டை விரும்புகிறேன் என்பதை உலகுக்குச் சரியாகக் காட்ட முடிந்தது. இந்தச் சண்டைக் காட்சிகளை நானே நிகழ்த்தியது என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எது வேலைச் செய்கிறது, எது வேலை செய்யவில்லை என்பதை அறிய நான் நிறையச் சிந்தனைகளைப் புகுத்தியதோடு பயிற்சிகளைச் செயல்படுத்தினேன்.

முடிவைக் கண்டு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். என் சகோதரர், சங்கரா கோவிந்தசாமியுடன் இணைந்து நடிக்க முடிந்தது இன்னொரு முக்கியமானத் தருணமாகும். தனது பயிற்சியாளரின் ஆலோசனைக்கு எதிராக வீரா பெரும் பணச் சார்ந்த சண்டையில் பங்கேற்கும் காட்சியான அத்தியாயம் 4-இல் ஒளிபரப்பானச் சண்டையை நானும் அவரும் வடிவமைத்தோம்.

ஷர்மேந்திரன்

ஷர்மேந்திரன்: வீரா, எனது முதல் தொலைக்காட்சித் தொடர். நடிப்பது எளிதல்ல என்றுதான் சொல்ல வேண்டும். குறிப்பாக முகபாவனைகளை வழங்கத் தொடக்கத்தில் எனக்கு மிகவும் சவாலாக இருந்தது.

ஆனால், இயக்குநர், இணை இயக்குநரின் வழிகாட்டுதல்கள் எனக்கு இருந்தன. முழு செயல்முறையிலும் அவர்கள் என்னை ஆதரித்து வழிநடத்தினர். நான் அழும் காட்சியை நிகழ்த்த வேண்டியிருந்தது என்னுடைய மறக்க முடியாத அல்லது மிகவும் சவாலானக் காட்சி. இது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் படைப்பின் முடிவைப் பார்த்தபோது, நான் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.

3. ஒரு புகழ்பெற்றத் தற்காப்புக் கலை வீரரான நீங்கள் நடிகராக மாறியப்போது அம்மாற்றத்தை எவ்வாறு உணர்கிறீர்கள்?

தீபன்: நூற்றுக்கணக்கான நபர்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதுக், கேமரா லென்ஸின் முன் உணர்ச்சிகளைக் காட்டுதல் நான் கற்றுக் கொண்டக் கடினமான விஷயங்களில் ஒன்றாகும்.

நான் இன்னும் திரைப்படங்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் கற்றுக் கொண்டிருக்கிறேன். அது எவ்வளவுக் கடினமாக இருக்கிறதோ, அவ்வளவுக் கடினமாக நாம் போராடுகிறோம், இல்லையா? ஒரு தற்காப்புக் கலை வீரராக எனதுத் திறமையும் ஒழுக்கமும் முற்றிலும் உதவியது.

ஒரு முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடித்தது மட்டுமல்லாமல் சண்டைக் காட்சிகளை ஒரே நேரத்தில் இயக்கியதை நான் சாதனையாகக் கருதுகிறேன். என்னை ஆதரித்த இயக்குநர் மற்றும் புகைப்பட இயக்குநருக்கு எனது மனமார்ந்தப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஷர்மேந்திரன்: ஆம், எனதுச் சண்டைத் திறன்கள் பரத் வேடத்தில் நடிக்க எனக்கு பெரிதும் உதவியது. ஏனென்றால், இந்தத் தொடர் கலப்புத் தற்காப்புக் கலைகளைப் பற்றியது. எனவே, சண்டைக் காட்சிகளில் நடிப்பது எனக்கு மிகவும் எளிதாக இருந்தது. ஏனென்றால் என் நிஜ வாழ்க்கையில் நான் அதைத்தான் செய்கிறேன். இந்தத் தொடரில் நீங்கள் பார்க்கும் அனைத்துச் சண்டைக் காட்சிகளும் உண்மையானவை மற்றும் அனைத்தும் தொழில்முறை வீரர்களால் நிகழ்த்தப்பட்டது என்பதை நினைவில் கொள்க.

4. இந்தத் தொடருக்கான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

தீபன்: இந்தத் தொடரை உருவாக்க நாங்கள் நிறைய நேரத்தையும் சக்தியையும் செலவழித்தோம், அதை வெற்றிகரமாகச் செய்துள்ளோம். முதலில், ஒரு குழுவாக எங்களின் தயாரிப்பை எண்ணி நான் மகிழ்ச்சியடைகிறேன்.

மேலும், இது ஒரு திடமானத் தயாரிப்பு என்று கூறினால் அது மிகையாகாது. அது உங்கள் இதயத்தில் ஒரு இடத்தைப் பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். எந்த விஷயத்திலும் நாம் முன்னோக்கி மற்றும் மேல்நோக்கியேச் செல்வோம்.

ஷர்மேந்திரன்: குடும்பம், நட்பு, காதல் என பலவற்றை உள்ளடக்கியக் கலப்புத் தற்காப்புக் கலைகளை (எம்எம்ஏ) மையமாகக் கொண்ட முதல் உள்ளூர் தமிழ் விளையாட்டுத் தொடர் வீரா என்பதால் இரசிகர்கள் இந்தத் தொடரை இரசிப்பார்கள் என்று நம்புகிறேன். ஒரு தற்காப்புக் கலை வீரர் தனது அன்றாட வாழ்க்கையில் தனது இலக்குகளை அல்லது இலட்சியத்தை அடைய எதிர்க்கொள்ளும் சவால்களைப் பற்றி விழிப்புணர்வைப் பொதுமக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தத் தொடர் ஏற்படுத்தும்.

வாழ்க்கையில் விடாமுயற்சியை எப்போதும் நிலைநிறுத்துங்கள் என்பதே இத்தொடர் வழங்க விரும்பும் முக்கிய கருத்து.