Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘பனாஸ் டோக் வித் விகடகவி’ தொகுப்பாளர் மகேனுடன் சிறப்பு நேர்காணல்

ஆஸ்ட்ரோ : ‘பனாஸ் டோக் வித் விகடகவி’ தொகுப்பாளர் மகேனுடன் சிறப்பு நேர்காணல்

394
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ: ‘பானாஸ் டாக் வித் விகடகவி’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விகடகவி மகேனுடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணல்:

1. உங்களின் பின்னணியைப் பற்றிக் கூறுக.

நான் ஜோகூரைச் சேர்ந்த மகேந்திரன் ராமன். நான் முன்னாள் இயந்திரப் பொறியாளர் (மெக்கானிக்கல் இன்ஜினியர்). நான் கடந்த 22 வருடங்களாகக் கலைத்துறையில் இருக்கிறேன். 2001-இல் பாடலாசிரியராக எனது பயணத்தைத் தொடங்கிய நான், 2004-இல் பிரதான ஊடகத்தினுள் (டிவி) நுழைந்தேன். ஆஸ்ட்ரோவில் தொகுப்பாளராக நான் அறிமுகமான முதல் நிகழ்ச்சி, ‘ஆட்டம் 100 வகை’. நான் ஒரு ராப்பராக இசைத் துறையில் ஊடுருவி, பின்னர் திரைப்படங்களில் நடித்தேன், இப்போதுத் திரைப்பட இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வளர்ந்து வருகிறேன். ‘ஆட்டம் 100 வகை’ நிகழ்ச்சியை முதன்முறையாகத் தொகுத்து வழங்கியது எனக்கு மிகவும் சவாலாக இருந்தது. ஏனெனில் எனது உரையாடல் வரிகளை என்னால் சிறப்பாகப் பேச முடியவில்லை. எனவே பதினாறு உரையாடல் வரிகள் எட்டாகக் குறைக்கப்பட்டன. இருப்பினும் எனக்கு அது கடினமாகத்தான் இருந்தது. எனது முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ‘ஆட்டம் 100 வகை’-ஐ திரு. அண்ணாதுரை இயக்கினார், தற்போதைய பனாஸ் டோக் வித் விகடகவி நிகழ்ச்சிக்கும் அவர்தான் நிர்வாகத் தயாரிப்பாளர். எனவே, இது என் இதயத்திற்கு மிக நெருக்கமான ஒன்று என்றுதான் கூறுவேன், நான் அதை என்றென்றும் போற்றுவேன்.

2. பனாஸ் டோக் வித் விகடகவி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அனுபவம் எவ்வாறு இருந்தது?

#TamilSchoolmychoice

என் சுய உரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனது கனவு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தி விகடகவி ஷோ’ என்றத் தலைப்பில் ஓர் உரை நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோவிடம் முன்மொழிந்தேன், ஆனால் அந்த நேரத்தில் அது நிராகரிக்கப்பட்டது. ஆஸ்ட்ரோ பிரதிநிதிகளுடனான சந்திப்புகளுக்குப் பிறகு, பனாஸ் டோக் வித் விகடகவி எனும் இந்தத் தனித்துவமான உரை நிகழ்ச்சி பிறந்தது. பெரும்பாலான விருந்தினர்கள் எனது நண்பர்கள் மற்றும் எனக்குத் தெரிந்தவர்கள் என்பதால் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதுச் சற்றுச் சவாலாக இருந்தது. அதே சமயம், சமூக வலைத்தளங்களில் அலைகளை ஏற்படுத்திய தங்களது கடந்தக் கால மற்றும் தற்போதையப் பிரச்னைகள் குறித்து இரசிகர்களுக்கு விளக்கமளிக்க இது ஒரு சிறந்த தளமாக இருக்கும் என்று நான் நம்பினேன்.

3. இந்த நிகழ்ச்சியின் மீதான உங்களின் சில நம்பிக்கைகள் யாவை?

உள்ளூர் கலைஞர்கள் மற்றும் சமூக ஊடகப் பிரபலங்களின் இரசிகர்கள் மத்தியில் அலைகளை ஏற்படுத்திய அவர்களின் சில விஷயங்களைப் பற்றி நேர்காணல் செய்யவும் அவர்கள் தரப்புக் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் இந்த நிகழ்ச்சி வாய்ப்பளிப்பதால் இந்த நிகழ்ச்சி இரசிகர்களை வெற்றிகரமாகச் சென்றடையும் என்று நம்புகிறேன். இன்னும் தனித்துவமான நிகழ்ச்சிகளை உருவாக்க இந்த நிகழ்ச்சி பிள்ளையார் சுழியாக இருக்கும் என்று நான் கூறுவேன்.

4. உங்களின் இரசிகர்களுக்காக ஒரு செய்தியைப் பகிரவும்.

எனது இரசிகர்கள் எனதுக் குடும்பத்தைப் போன்றவர்கள். நான் கலைத்துறையில் எனது பயணத்தைத் தொடங்கிய நாள் முதல் அவர்கள் என்னுடன் இருந்தனர். என்னுடைய எல்லா முயற்சிகளிலும் எனக்கு உறுதுணையாக இருந்து ஆதரவளித்தனர். அதேபோல், இந்த நிகழ்ச்சியை நேர்மறையானக் கண்ணோட்டத்தில் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். மேலும் பல நிகழ்ச்சிகளை வழங்க எனக்கு ஆதரவுத் தாருங்கள்.