Home உலகம் இந்தோனிசியாவிலும் வாரிசு அரசியல் – ஜோகோவி மகன் துணையதிபர் ஆவாரா?

இந்தோனிசியாவிலும் வாரிசு அரசியல் – ஜோகோவி மகன் துணையதிபர் ஆவாரா?

319
0
SHARE
Ad

ஜாகர்த்தா : பல்வேறு அரசியல் போராட்டங்களுக்குப் பின்னர் இந்தோனிசியாவின் அரசியலமைப்புச் சட்டம் மாற்றப்பட்டு, அந்நாட்டின் அதிபர் ஒரு தவணைக்கு 5 ஆண்டுகள் என 2 தவணைகளுக்கு மட்டுமே அதிபராக இருக்க முடியும் என்ற நிர்ணயம் கொண்டுவரப்பட்டது.

ஆனால் இப்போது ஒரு புதிய அரசியல் சிக்கல் இந்தோனிசியாவில் எழுந்துள்ளது. அதுதான் வாரிசு அரசியல். இந்தோனிசியாவின் நடப்பு அதிபர் ஜோகோவி விடோடோ பதவிக் காலம் முடிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அதிபர், துணையதிபர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவிருக்கிறது. அவர் ஏற்கனவே 2 ஆண்டுகள் பதவி வகித்து விட்டதால் மீண்டும் அதிபராக போட்டியிட முடியாது.

இந்நிலையில் அவரின் மூத்த மகன் ஜிப்ரான் ரகாபுமிங் ராக்கா துணையதிபராக போட்டியிட பிரச்சாரங்கள் செய்து வருகிறார். ஆனால் அவருக்கு வயது 36-தான்.

#TamilSchoolmychoice

இந்தோனேசிய அதிபர் மற்றும் துணை அதிபர்  வேட்பாளர்களுக்கான குறைந்தபட்ச வயது 40 என்ற சட்டமும் நடப்பில் இருக்கிறது.

எனினும் இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளித்த இந்தோனிசியாவின் அரசியலமைப்பு நீதிமன்றம் (Constitutional Court) குறைந்தபட்ச வயது நிர்ணயம் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பிராந்தியத் தலைவர் எவருக்கும் பொருந்தாது என்று தீர்ப்பளித்துள்ளது.

ஜோகோவியின் அரசியல் நாடகம் இதுவென இந்தோனிசியாவில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. காரணம் அரசியலமைப்பு நீதிமன்றத்தின் தலைவர் ஜோகோவியின் தங்கையைத் திருமணம் செய்தவராவார்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ “ஜோகோவி” விடோடோவின் மூத்த மகனான ஜிப்ரான் ரகாபுமிங் ராக்கா, பிப்ரவரி 2024 ஜனாதிபதித் தேர்தலில் அதிபர் வேட்பாளர் பிரபோவோ சுபியாண்டோவின் துணை அதிபராகப் போட்டியிட இந்த நீதிமன்றத் தீர்ப்பு வழிவகுத்திருக்கிறது.

ஜிப்ரானுக்கு 36 வயது என்றாலும், அவர் சுராகர்தா நகர மேயராக இருப்பதால் துணையதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளார்.

ஜோகோவி அரசியல் பாரம்பரியத்தைக் கொண்டவரில்லை. அரசியல் வாரிசாக உருவெடுத்தவரும் இல்லை.  சுரகாட்டாவில் ஒரு மரத் தளவாடங்களுக்கான தொழிலதிபராக இருந்தார். அந்நகருக்கு அவர் மேயரானார். பின்னர் ஜகார்த்தா கவர்னரானார்.

10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனிசியாவின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டு தவணைகள் அதிபராகப் பதவி வகித்திருக்கிறார்.