Home உலகம் ஜீ ஜின் பெங்கை சர்வாதிகாரி என வர்ணித்த ஜோ பைடன்

ஜீ ஜின் பெங்கை சர்வாதிகாரி என வர்ணித்த ஜோ பைடன்

240
0
SHARE
Ad

வாஷிங்டன் : உலகில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் இரு முக்கிய வல்லரசு நாடுகள் சீனாவும், அமெரிக்காவும்! கடந்த ஓராண்டாக அமெரிக்க அதிபரும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொள்ளவே இல்லை. இதனாலும் இரு நாடுகளின் உறவில் விரிசல்கள் தொடர்ந்தன.

இந்நிலையில் நேற்று (அமெரிக்க நேரப்படி) அந்த இரு தலைவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள விரிசல்களை சரி செய்வதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறினார்.

இருதரப்பு உறவை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்ட உச்சிமாநாட்டைத் தொடர்ந்து புதன்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பைடன்,  “நாங்கள் நடத்திய மிகவும் ஆக்கபூர்வமான மற்றும் பயனுள்ள விவாதங்கள் அவை என்று நான் நம்புகிறேன். நாங்கள் சில முக்கியமான முன்னேற்றங்களைச் அடைந்துள்ளோம் என நான் நம்புகிறேன்” எனக் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த பேச்சு வார்த்தைகளை “ஆழமான கருத்துப் பரிமாற்றம்” என்று சீனா விவரித்ததுடன், “ஒரு நாட்டின் வெற்றி மற்றொன்றுக்கு வாய்ப்பாகும்” என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தது.

எனினும் தைவான் விவகாரம் இருநாடுகளின் உறவுகளில் முக்கியமான பிரச்சினையாக இருப்பதாகவும் பைடன் எச்சரித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இரு நாடுகளும் மீண்டும் இராணுவத் தகவல் பரிமாற்றங்களைத் தொடர ஒப்புக் கொண்டுள்ளன.

உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் கடந்த ஒரு வருடமாக சந்திக்கவில்லை. நான்கு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சந்திப்பை இரு தரப்பும் ஆக்கபூர்வமானதாகவும், தொடர் அரச தந்திர நடவடிக்கைகளில் ஒன்றாகவும் மற்றும் பொருளாதார மோதல்களால் பாதிக்கப்பட்ட உறவை இயல்பாக்குவதற்கான ஒரு படியாகவும் இரு தரப்புகளும் கொண்டாடினர்.

எனினும் சந்திப்பின் முடிவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியபோது ஜோ பைடன் ஜி ஜின் பெங்கை ஒரு “சர்வாதிகாரி” என்று குறிப்பிட்டிருப்பது மீண்டும் புதிய சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.