Home நாடு கோலாலம்பூரில் இந்தியா-ஆசியான்  புது நிறுவனங்கள் உச்ச நிலை மாநாடு – வாய்ப்புகளை உருவாக்கும்

கோலாலம்பூரில் இந்தியா-ஆசியான்  புது நிறுவனங்கள் உச்ச நிலை மாநாடு – வாய்ப்புகளை உருவாக்கும்

261
0
SHARE
Ad

கோலாலம்பூரில் நடைபெறும் இந்தியா-ஆசியான் 
புது நிறுவனங்கள் உச்ச நிலை மாநாடு – வாய்ப்புகளை உருவாக்கும்

  மலேசியாவுக்கான இந்திய தூதர்  மேன்மைமிகு பி.என்.ரெட்டி அவர்களின் பத்திரிக்கை அறிக்கை

புது நிறுவனங்கள் தொடங்குவது தொடர்பிலான இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையிலான முதல் உச்சநிலை மாநாடு இன்று டிசம்பர் 12-ஆம் தேதியும் நாளை டிசம்பர் 13-ஆம் தேதியும் இரு நாட்களுக்கு கோலாலம்பூரில் நடைபெறுகிறது.

சன்வே பிரமிட் தங்கு விடுதியின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இந்த மாநாடு, இந்தியாவில் தொடங்கப்படும் புது நிறுவனங்கள் – அதே வேளையில் மலேசியாவிலும் மற்ற ஆசிய நாடுகளிலும் தொடங்கப்படும் புது நிறுவனங்கள் – தொடர்பான விவகாரங்களில் கவனம் செலுத்தும்.

#TamilSchoolmychoice

இந்தியாவிலிருந்து 35-க்கும் மேற்பட்ட புது நிறுவனங்களும் இந்திய அரசாங்கத்தின் முதலீட்டு, உள்நாட்டு வாணிப அமைச்சும் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப இலாகாவும் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றன. இந்த மாநாட்டுக்கான ஆதரவை ஐஐடி (Indian Institute of Technology (IIT) Kanpur) எனப்படும்  கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகம், ஹைதராபாத் நகரில் உள்ள டீ ஆப் (T-Hub) ஆகிய அமைப்புகளும் இந்த மாநாட்டுக்கு ஆதரவை வழங்கியுள்ளன. சுமார் 160 புது நிறுவனங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கு பெறுகின்றனர்.

மலேசியாவின் சார்பில் பல புது நிறுவனங்களைச் சார்ந்த தொழில் முனைவர்கள் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர். இதன் மூலம் இந்தியா- மலேசியா இடையிலான இது போன்ற புது நிறுவனங்கள் தொடங்கும் வணிக முயற்சிகள் மேலும் கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் சார்பில் பங்கெடுக்கும் 35 புது தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியா- மலேசியா – ஆசியான் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ள பல்வேறு தொழில் துறைகளை பிரதிநிதித்துகின்றனர்.

புதுநிறுவனங்களின் தொடக்கம் – இந்தியாவின் புரட்சி

புது தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்கும் நடவடிக்கைகள் இந்தியாவில் இதுவரை காணாத வளர்ச்சியை பதிவு செய்திருக்கின்றன. உலக அளவில் புது நிறுவனங்கள் தொடங்கும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. 116 ஆயிரம் அங்கீகரிக்கப்பட்ட புது நிறுவனங்களும்இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கின்றன.

அதே சமயத்தில் யூனிகார்ன் (unicorns) என்று அழைக்கப்படும் 111 நிறுவனங்களும் மொத்தம் 350 பில்லியன் டாலர்களுக்கும் கூடுதலான முதலீட்டில் இந்தியாவில் தொடங்கப்பட்டிருக்கின்றன. யூனிகார்ன் என்பவை 1 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் அதிகமான முதலீட்டோடு தொடங்கப்படும் பெரிய நிறுவனங்களாகும்.

இவ்வாறு புது நிறுவனங்கள் தொடங்கும் புரட்சி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தூரநோக்கு சிந்தனையோடு 2016 ஜனவரியில் அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.

இந்தியா என்பது வேலை தேடுபவர்களின் நாடு என்ற நிலைமை மாறி, இந்திய அரசாங்கத்தின் புது நிறுவன தொடக்க முயற்சிகளின் காரணமாக வேலை வாய்ப்புகளை வழங்கும் நாடாக இந்தியாவை உருமாற்றும் வியூகத்தின் தொடக்கம்தான் நரேந்திர மோடி அவர்களின் அறிவிப்பாகும்.

புது நிறுவனங்கள் தொடங்கும் இந்தியாவின் இலக்கு, புத்தாக்கமும் தொழில் முனைவோர் முயற்சிகளும் ஒருங்கிணைந்த திட்டமாகும்.  பொது இலக்கவியல்  (டிஜிடல்) கட்டமைப்பும் அதனை மேம்படுத்தும் தொடர் முயற்சிகளும் இந்த புது நிறுவனங்கள் தொடங்கும் திட்டங்களை வளர்ச்சியை மேலும் துரிதமாக்கி வருகின்றன.

2014 ஆண்டு முதல் கொண்டு  அகண்ட அலைக்கற்றை (Broadband) தொடர்புகள் 61 மில்லியனிலிருந்து 2022 இறுதியில் 832 மில்லியன் ஆக உயர்ந்திருக்கின்றன. விவேக கைப்பேசி (Smartphone) பயனர்களின் எண்ணிக்கை 150 மில்லியனிலிருந்து 750 மில்லியன் ஆக உயர்ந்திருக்கின்றது.

புதிய தொழில் கண்டுபிடிப்புகளுக்கான அங்கீகாரம் வழங்கும் காப்புரிமைக்கான (patent) இந்தியர்களின் விண்ணப்பங்கள் 31.6 விழுக்காடு அதிகரித்து 2022 ஆம் ஆண்டில் 55,718 ஆக அதிகரித்து இருந்தது.

இதுபோன்ற வளர்ச்சி உலக அளவில் எந்த நாடுகளிலும் பதிவாகவில்லை

புதிய இந்தியா  அனைத்து தொழில் முனைவோர்களுக்கும் சரிசமமான, நியாயமான வாய்ப்புகளை வழங்கி தொழில் புரியும் மையமாக உருவெடுத்து வருகிறது. நியாயமான போட்டிகளை உருவாக்கி இருக்கிறது அதே வேளையில் இலக்கவியல் பொருளாதாரத்தையும் உள்ளடக்கி விரிவாக்கி இருக்கிறது.

ஜி20 (G20) எனப்படும் உலக நாடுகளின் கூட்டமைப்புக்கு தற்போது இந்தியா தலைமை வகிக்கிறது. உலக அளவில் இலக்கவியல் ரீதியான பொது கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி  தரவுகளை சேகரித்து, நிர்வகிக்கும்  இந்தியாவின் பரிந்துரைத் திட்டத்தை ஜி20 அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்த வகைத் திட்டம் மலேசியாவிலும் உருவாக்கப்பட இந்தியாவின் நிபுணத்துவத்தையும் அறிவாற்றலையும் பகிர்ந்து கொள்ள பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக இருக்கிறது.

இந்தியா – ஆசியான் – இலக்கவியல் இணைந்த பொருளாதாரத்தை நோக்கி…

இந்தியாவுடன் 30 ஆண்டுகால கலந்துரையாடல் வரலாற்றை ஆசியான் கொண்டிருக்கிறது.  எனவே இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையில் மற்ற பல்வேறு தரப்பட்ட ஒத்துழைப்புகளோடு இலக்கவியல் பொருளாதாரம், புது நிறுவனங்கள் தொடங்குவது போன்ற அம்சங்களையும் மேலும் வலுப்படுத்த அதற்கான கூட்டறிக்கையும் அண்மையில் வெளியிடப்பட்டது

இந்தியா 2022-ல் 75 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய வேளையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து பிரமாணங்களை எடுக்குமாறு இந்திய மக்களை கேட்டுக் கொண்டார். 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருமாற்றுவது அதில் ஒன்றாகும். புதிய இந்தியாவின் விடியல் என்பது வலிமையான, மதிப்புமிக்க வளர்ச்சி அடையாளங்களின் அடிப்படையாகக் கொண்டதாகும். இந்திய பொருளாதாரம் நடைபாண்டில் 7 விழுக்காடு உயரும் என மதிப்பிடப்படுகிறது.  அனைத்துலக நாணயக் கழகம் (IMF) வெளியிட்டுள்ள மதிப்பீடுகளின்படி  உலகப் பொருளாதார வரிசையில் தற்போது ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா, எதிர்வரும் 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என கணிக்கப்படுகிறது.

புதிய இந்தியா என்பது உலக அளவில் மிகப் பிரகாசமான ஓர் மையமாகும். அனைத்துலக வளர்ச்சிக்கும் புத்தாக்கத்திற்கும் இந்தியா தொடர்ந்து தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

அண்மையில் ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை வெற்றிகரமாக ஏற்ற இந்தியா, நிலவின் தென்பகுதியில் சந்திராயன்-3 என்ற விண்கலம் தரையிறங்கச் செய்யும் சாதனையையும் படைத்தது. மனித வளத்தை அடிப்படையாகக் கொண்ட தொடர் வளர்ச்சியை உருவாக்கும் இலக்கை கொண்ட வெளியுறவு கொள்கையின் தலைமைத்துவத்தால் உலகில் சில நாடுகளுக்கு இடையில் நடைபெறும் நெருக்கடிகளுக்கிடையில் இந்த சாதனைகளை புரிந்து இருப்பது இந்தியாவின் ஆற்றலையும் திறனையும் குறிக்கிறது. உலகின் தென் மண்டலத்தின்  மதிப்புமிக்க குரலாக இதனால் இந்தியா திகழ்கிறது.

இத்தகைய பின்னணியில் கோலாலம்பூரில் நடைபெறும் இந்தியா-ஆசியான் மாநாடு இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் புது நிறுவனங்கள் தொடங்கும் ஒரு வளமையான சூழலை உருவாக்கும் வாய்ப்பாகும். ஆசியான் வட்டாரத்திற்குள் முக்கிய வணிக மையமாக மலேசியா தன் எல்லைகளை விரிவாக்கும் வாய்ப்பையும் இந்த மாநாடு ஏற்படுத்தி தரும்.