Home நாடு பினாங்கு இந்து அறப்பணி வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் இராமசந்திரனுக்கு 106,555 ரிங்கிட் இழப்பீடு

பினாங்கு இந்து அறப்பணி வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் இராமசந்திரனுக்கு 106,555 ரிங்கிட் இழப்பீடு

296
0
SHARE
Ad
எம்.இராமசந்திரன்

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான எம்.இராமசந்திரன் நியாயமற்ற முறையில் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என நீதிமன்ற உத்தரவையும் அதற்கான இழப்பீடாக 106,555 ரிங்கிட் வழங்கப்பட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவையும் பெற்றுள்ளார்.

இதற்கான நீதிமன்ற உத்தரவை கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி இராமச்சந்திரன் பெற்றார். எனினும் இந்து அறப்பணி வாரியம் அந்த நீதிமன்ற உத்தரவை புறக்கணித்தது.

இந்து அறப்பணி வாரியம் இன்னும் இராமச்சந்திரனுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை ஏன் செலுத்தவில்லை என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி எம்.யோகேஸ்வரி கேள்வி எழுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்து அறப்பணி வாரியம் தன் முழு கணக்கு விவரங்களை வழங்க வேண்டும் என்றும் சொத்துகளின் பட்டியலையும், கடன் செலுத்த வேண்டியவர்களின் பட்டியலையும் வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 24 (2024) நடைபெறவிருக்கும் விசாரணையில் இந்து அறப்பணி வாரியத்தின் பிரதிநிதி கலந்து கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில் இந்து அறப்பணி வாரியத்தின் தலைவர் ஆர்.எஸ்.என்.ராயர் இராமச்சந்திரன் பெற்றுள்ள உத்தரவைச் செயல்படுத்த வேண்டாம் என அவரைத் தான் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இராமச்சந்திரனின் நியாயமற்ற பதவி நீக்கம் தொடர்பாகவும் அவர் பெற்றுள்ள நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும் இந்து அறப்பணி வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் என்றும் ராயர் கூறினார்.

இராமச்சந்திரன் ஜனவரி 13-ஆம் தேதி நன்னெறிக் கோட்பாடுகளை மீறினார் என்ற அடிப்படையில் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் தனது நீக்கம் நியாயமற்றது என வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றார். நீதிமன்ற உத்தரவையும் பெற்றார்.

இராமச்சந்திரன் தற்போது பினாங்கு 2-வது துணை முதல்வர் ஜக்டீப் சிங் டியோ அலுவலகத்தில் இந்தியர் விவகார அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்.