Home நாடு கோலகுபுபாரு : பிரதமர் அன்வார் பிரச்சாரத்திற்கு வருவாரா?

கோலகுபுபாரு : பிரதமர் அன்வார் பிரச்சாரத்திற்கு வருவாரா?

181
0
SHARE
Ad
ரியாத் உலகப் பொருளாதார மாநாட்டில் பிரதமர் அன்வார்

கோலகுபுபாரு : வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்து கோலகுபுபாரு பிரச்சாரம்  தீவிரமடைந்த நிலையில் பிரச்சாரத்திற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பொதுவாக பிரதமராக இருப்பவர்கள் நாட்டில் நடைபெறும் இடைத் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவதில்லை.

இதையே தொடர்புத் துறை அமைச்சரும் அரசாங்கப் பேச்சாளருமான பாஹ்மி பாட்சில் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இந்தப் பாரம்பரியத்தை அண்மையக் காலத்தில் முறியடித்தவர் துன் மகாதீர்தான். 2018-இல் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் அன்வார் இப்ராகிம் போட்டியிட்டபோது அவருக்காகப் பிரச்சாரம் செய்ய வந்தார் பிரதமராக இருந்த துன் மகாதீர். அன்வாருக்கு எதிராக செயல்படுகிறார் என்ற எதிர்மறைப் பிரச்சாரங்களை முறியடிக்கவே மகாதீர் பாரம்பரியத்தை உடைத்து போர்ட்டிக்சனில் அன்வாரை ஆதரித்துப் பிரச்சாரம் செய்தார்.

கோலகுபுபாரு இடைத் தேர்தல் தற்போது மிகவும் பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்றுவருகிறது. ஆளும் பக்காத்தான் ஹாரப்பான் இந்த இடைத் தேர்தலில் தோல்வியடைந்தால் அது ஒட்டுமொத்த ஒற்றுமை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்கணிப்பாகப் பார்க்கப்படும். அதன் காரணமாக, அன்வாரும் கோலகுபுபாரு பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த அன்வார் அங்கிருந்து திரும்பியதும், கோலகுபுபாரு இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.