Home இந்தியா கர்நாடகா மாநிலத்தைக் கலக்கும் ரேவண்ணா ஆபாச காணொலிகள்!

கர்நாடகா மாநிலத்தைக் கலக்கும் ரேவண்ணா ஆபாச காணொலிகள்!

304
0
SHARE
Ad
பிரஜ்வால் ரேவண்ணா

பெங்களூரு : தென்னிந்தியாவில் பாஜக கால்பதிக்க முடியாது – இங்கே தாமரை மலராது – என்ற முழக்கங்களுக்கு மத்தியில் பாஜக கைப்பற்றிய முதல் தென்னிந்திய மாநிலம் கர்நாடகா. ஆனால் உட்கட்சிப் போராட்டத்தினால் பின்னர் தங்களின் ஆட்சியைப் பறிகொடுத்தனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் மாநில அதிகாரத்தைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது. சித்தராமையா இப்போது மாநில முதலமைச்சர். கடந்த பொதுத் தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக வெற்றி கொண்டது. மாநிலத்தை ஆள்வது காங்கிரஸ் என்பதால் இந்த முறையும் பாஜக 25 நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்வது கடினம் என்கிறார்கள்.

கர்நாடகா மாநிலத்தில் பாஜக-காங்கிரஸ் தவிர்த்து 3-வது பெரிய கட்சியாக வலம் வருவது மதச்சார்பற்ற ஜனதா தளம். குமாரசாமி தலைமை தாங்கும் கட்சி. இவரின் தந்தையார் தேவகவுடா ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராகப் பதவி வகித்தவர். 91 வயதிலும் சளைக்காமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் பாஜக கூடுதலாக சில தொகுதிகளை வெல்லலாம் என்பது சிலரின் ஆரூடம்.

#TamilSchoolmychoice

இந்த சூழ்நிலையில்தான் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரஜ்வால் ரேவண்ணா சம்பந்தப்பட்ட ஆபாச காணொலிகள் வெளியாகி கர்நாடக அரசியலைக் கலக்கி வருகின்றன. இந்த முறையும் மீண்டும் ஹாசன் தொகுதியில் போட்டியிடுகிறார் ரேவண்ணா.

28 தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் இரண்டு கட்ட வாக்களிப்பு நடத்தப்படுகிறது. முதல் கட்ட வாக்களிப்பு நடைபெற்ற ஏப்ரல் 26-ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு மட்டும் வாக்களிப்பு. அன்று ஹாசன் தொகுதிக்கு வாக்களிப்பு நடந்து முடிந்து விட்டது. அதற்கு அடுத்த நாள் ரேவண்ணா நாட்டை விட்டு ஜெர்மனிக்கு தப்பிச் சென்று விட்டார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவின் எஞ்சிய 14 தொகுதிகளுக்கு எதிர்வரும் மே 7-ஆம் தேதி மூன்றாவது கட்டத் தேர்தலின்போது வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் ரேவண்ணாவின் ஆபாசப் பட விவகாரம் வாக்காளர்களிடையே முக்கியப் பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரேவண்ணா சார்ந்திருக்கும் ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்திருப்பதால் பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் அது பின்னடைவைக் காணலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.

ரேவண்ணா ஆபாசப் படங்கள் குறித்த விசாரணையை மேற்கொள்ள தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக மாநில துணை முதல்வர் சிவகுமார் அறிவித்துள்ளார்.