Home நாடு சுங்கை பாக்காப்: பாஸ் – பிகேஆர் போட்டி

சுங்கை பாக்காப்: பாஸ் – பிகேஆர் போட்டி

392
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : சுங்கை பாக்காப் இடைத் தேர்தலில் பெரிக்காத்தான் கூட்டணி சார்பில் பாஸ் கட்சி போட்டியிடும் என்பது உறுதியாகியுள்ளது. வேட்பாளர்களைப் பரிசீலித்து வருகிறோம் என பாஸ் கட்சி அறிவித்துள்ளது.

அதே போன்று பக்காத்தான் கூட்டணி சார்பில் பிகேஆர் கட்சி அந்தத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் என பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோ அறிவித்தார். எனினும் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தேர்தல் ஆணையம் எதிர்வரும் ஜூன் 6-ஆம் தேதி சுங்கை பாக்காப் இடைத் தேர்தல் குறித்து விவாதிக்க கூடுகிறது.

#TamilSchoolmychoice

கோலகுபு பாரு இடைத் தேர்தலின் வெப்பம் தணிவதற்கு முன்பே இன்னொரு சட்டமன்ற இடைத் தேர்தலை நாடு எதிர்நோக்கவுள்ளது. பினாங்கு சுங்கை பாக்காப் சட்டமன்ற உறுப்பினர், 56 வயதான நோர் சாம்ரி லாத்திஃப் கடந்த மே 24-ஆம் தேதி காலமானார்.

சுங்கை பாக்காப், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதியின் கீழ்வரும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.

கோலகுபு பாரு போன்றே வாக்காளர்களை இனவிழுக்காடு ரீதியாகக் கொண்டிருக்கும் சட்டமன்றம் சுங்கை பாக்காப் ஆகும். கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின்படி 59.4 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களையும், 22.5 விழுக்காட்டு சீன வாக்காளர்களையும்,   17.4 விழுக்காடு இந்திய வாக்காளர்களையும்  0.7 விழுக்காடு மற்ற வாக்காளர்களையும் சுங்கை பாக்காப் கொண்டிருக்கிறது.

நோர் சாம்ரி நிபோங் திபால் தொகுதி பாஸ் கட்சியின் தலைவருமாவார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அவர் 1,563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நூர்ஹிடாயா சே ரோஸ் ஆவார்.