Home நாடு அன்வார்-முஹிடின், அவதூறு வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள இணக்கம்!

அன்வார்-முஹிடின், அவதூறு வழக்குகளைத் தீர்த்துக் கொள்ள இணக்கம்!

120
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினும் தங்களுக்கிடையிலான நீதிமன்ற அவதூறு வழக்குகளைத் தீர்த்து கொள்ளவும் அதன் மூலம் தங்களுக்கிடையிலான தனிப்பட்ட கருத்து மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவும் இணக்கம் கண்டுள்ளனர்.

தங்களின் முகநூல் பக்கத்தில் கூட்டாக இணைந்து வெளியிட்ட அறிக்கையின் வழி அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

பொதுமக்களிடையே இந்த அவதூறு வழக்குகளால் ஏற்பட்ட பாதிப்புகள் – உயர்நீதிமன்ற நீதிபதியின் பரிந்துரை – நாட்டின் நடப்பு நிலவரங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தருவது – நாட்டு மக்களின் நலன்கள் மீது கவனம் செலுத்துவது – போன்ற அம்சங்களைக் கருத்தில் கொண்டு தாங்கள் இந்த முடிவுக்கு வந்ததாக அன்வார் இப்ராகிமும், முஹிடின் யாசினும் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இதற்கு மேலும் இது குறித்து தாங்கள் அறிக்கைகள் எதனையும் விடுக்கப் போவதில்லை என்றும் தங்களின் முடிவை அனைத்துத் தரப்புகளும் மதிப்பார்கள் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த முடிவு எட்டப்படுவதற்கு ஆலோசனை வழங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிக்கும் நீதித் துறை தரப்புக்கும் தங்களின் நன்றியையும் அவர்கள் தங்களின் அறிக்கையின் வழி தெரிவித்துக் கொண்டனர்.

8.3 பில்லியன் ரிங்கிட் பெல்டா குடியேற்றவாசிகளின் கடன்களை முஹிடின் அரசாங்கம் தள்ளுபடி செய்யவில்லை என அன்வார் கூறியதைத் தொடர்ந்து முஹிடின் அவர் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தார்.

சிலாங்கூர் அரசாங்கத்தின் ஆலோசகராக பணியாற்றியதற்காக அன்வாருக்கு 15 மில்லியன் ரிங்கிட் ஊதியம் வழங்கப்பட்டதாக முஹிடின் தெரிவித்ததைத் தொடர்ந்து இதற்கு முன்னர் அன்வார், முஹிடின் மீது அவதூறு வழக்கொன்றைத் தொடுத்திருந்தார்.