
புத்ரா ஜெயா: இன்று வியாழக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வந்து தன்மீதான ஊழல் புகார்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்கிய முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் மீண்டும் நாளை வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தனது வாக்குமூலம் வழங்கும் படலத்தைத் தொடர்வார்.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். “ஆம், அவர் நாளை காலை 9 மணிக்கு மீண்டும் வருமாறு அழைக்கப்படுவார்,” என்று அசாம் பாக்கி இன்று வியாழக்கிழமை (மார்ச் 13) ஊடகங்களைத் தொடர்புகொண்டபோது தெரிவித்தார்.
பெரா நாடாளுமன்ற உறுப்பினருமான இஸ்மாயில் சாப்ரி இன்று காலை 9.46 மணிக்கு ஊழல் தடுப்பு ஆணையத் தலைமையகத்திற்கு வந்தார். பின்னர் 3.13 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார். விசாரணை முடியும் வரை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைக்கவிருப்பதாக அவர் விடுத்த சுருக்கமான அறிக்கையில் தெரிவித்தார்.
மார்ச் 3-ஆம் தேதி, பத்திரிகையாளர்களைச் சந்தித்த அசாம் பாக்கி, சுமார் RM170 மில்லியன் பணம் ஒரு பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக நடந்த சோதனையின் பின்னணியில், இஸ்மாயில் சாப்ரி ஊழல் மற்றும் பணமோசடி வழக்கில் சந்தேக நபராக இருப்பதாகத் தெரியப்படுத்தினார்.
பல்வேறு அனைத்துலக நாணயங்களில் ரொக்கம் கைப்பற்றப்பட்டதோடு, 16 கிலோ தூய தங்கக் கட்டிகளும் (மொத்தம் சுமார் RM7 மில்லியன் மதிப்புள்ளவை) மீட்கப்பட்டன.
மேலும், விசாரணையின் ஒரு பகுதியாக RM2 மில்லியனுக்கும் அதிக பணம் கொண்ட 13 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
இதுவரையில் 36 பேர் இந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே வாக்குமூலம் வழங்க அவர் அழைக்கப்பட்டிருந்தாலும், அவர் மருத்துவ விடுப்பு காரணமாக, வாக்குமூலம் வழங்குவதை ஒத்தி வைத்தார்.
இஸ்மாயில் சாப்ரி பிரதமராக தலைமை வகித்த அரசாங்கத்தின் “மலேசியா குடும்பம்” விளம்பரப் பிரச்சாரத்திற்கான செலவினம் குறித்த ஊழல் தடுப்பு ஆணையம் விசாரணையில் முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் சந்தேக நபராக உள்ளார் என ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இருப்பினும், ஊழல் தடுப்பு ஆணையம் இன்னும் இஸ்மாயில் சாப்ரியின் வங்கிக் கணக்குகளை முடக்கவில்லை. மேலும் அவரது அனைத்து வங்கிக் கணக்குகளையும் முதலில் விளக்கும்படி இஸ்மாயில் சாப்ரியிடம் கேட்க விரும்புவதாக அசாம் தெரிவிதிருந்தார்.