Home Photo News துன் சம்பந்தனின் வீராசாமி தோட்ட வழக்கு அனுபவங்கள் – நினைவு கூர்கிறார் டி.பி.விஜேந்திரன்!

துன் சம்பந்தனின் வீராசாமி தோட்ட வழக்கு அனுபவங்கள் – நினைவு கூர்கிறார் டி.பி.விஜேந்திரன்!

71
0
SHARE
Ad

(இன்று ஜூன்16 – துன் சம்பந்தனின் பிறந்த நாள். 1919-ஆம் ஆண்டில் பிறந்தவர். மஇகாவின் 5-வது தேசியத் தலைவராக – மலாயாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவராக – வரலாற்றில் இடம் பெற்றவர். சம்பந்தனின் பிறந்த நாளை முன்னிட்ட இந்த சிறப்புக் கட்டுரையில், அவரின் குடும்பத்தினருக்குச் சொந்தமான (பேராக், சுங்கை சிப்புட்) வீராசாமி தோட்ட வழக்கு காரணமாக அவரைச் சந்தித்த அனுபவங்களையும், சம்பந்தனின் சிறப்பியல்புகளையும் இரா.முத்தரசனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில்  விவரிக்கிறார் வழக்கறிஞர் டி.பி.விஜேந்திரன். மஇகாவின் தேசிய உதவித் தலைவர், தலைமைச் செயலாளர், காப்பார் நாடாளுமன்ற உறுப்பினர், மலேசிய நாடாளுமன்ற அவையின் துணைத் தலைவர் என பல பொறுப்புகளைக் கடந்த காலங்களில் வகித்தவர் டி.பி.விஜேந்திரன்)

  • கம்பீரமான தோற்றமும் நடையும் கொண்டவர் துன் சம்பந்தன்.
  • ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பான மேடை உரையாற்றும் தலைவரைக் கண்டதில்லை.
  • நிறைய நூல்களை வாசிக்கும் பழக்கமுடையவர். சொந்த நூல் நிலையம் வைத்திருந்தார்.

இனி, டி.பி.விஜேந்திரனின் நேர்காணலில் இருந்து முக்கியப் பகுதிகள்…

1954-இல் முதன் முதலில் சம்பந்தனைச் சந்தித்தேன்

சுங்கை சிப்புட்டில் மகாத்மா காந்தி கலாசாலை என்னும் தமிழ்ப் பள்ளியை துன் சம்பந்தன் குடும்பத்தினர் தோற்றுவித்தபோது, அதனைத் திறந்து வைக்க இந்தியப் பிரதமர் நேருவின் தங்கை விஜயலெட்சுமி பண்டிட் வருகை தந்தார். அப்போது மக்களிடையே மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக அது பார்க்கப்பட்டது.

டி.பி.விஜேந்திரன்
#TamilSchoolmychoice

அப்போது சம்பந்தன் மஇகா தேசியத் தலைவராகவில்லை. மகாத்மா காந்தி கலாசாலையை சுங்கை சிப்புட்டில் தோற்றுவித்தது, விஜயலெட்சுமி பண்டிட்டை மலேசியாவுக்கு வரவழைத்து போன்ற காரணங்களால் சம்பந்தன் இந்தியர்களிடையே பிரபலமாகியிருந்தார். அதுவே பிற்காலத்தில் அவர் மஇகா தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான காரணங்களில் ஒன்றாகவும் அமைந்தது.

விஜயலெட்சுமி பண்டிட் வருகை தந்த மகாத்மா காந்தி கலாசாலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு எனது தந்தை சிறுவனான என்னையும் அழைத்துச் சென்றார். அங்குதான் நான் முதன் முதலில் சம்பந்தனைச் சந்தித்தேன்.

நேருவின் தங்களை விஜயலெட்சுமி பண்டிட்

நானும் ஈப்போவில் பிறந்து வளர்ந்தவன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சம்பந்தன்-மாணிக்கவாசகம் தலைமைத்துவப் போராட்டம்

நான் சிங்கப்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டக் கல்வி முடித்ததும், கோலாலம்பூரில் டான்ஸ்ரீ ஆதி நாகப்பன் வழக்கறிஞர் அலுவலகத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். அந்தக் காலகட்டத்தில் – 1972ஆம் ஆண்டுவாக்கில் – மஇகாவில் சம்பந்தன், மாணிக்கவாசகம் இருவருக்கும் இடையிலான தலைமைத்துவப் போராட்டம் தொடங்கியது.

டான்ஶ்ரீ வெ.மாணிக்கவாசகம்

அந்தப் போராட்டத்தில் மாணிக்கவாசகத்தை ஆதி.நாகப்பன் ஆதரித்தார். நான் ஆதி.நாகப்பனின் கீழ் பணிபுரிந்து வந்ததாலும், அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்ததாலும், நானும் மாணிக்கவாசகத்தையே ஆதரித்தேன். அந்தப் போராட்டத்தில் சம்பந்தனை எங்களைப் போன்றவர்கள் எதிர்த்ததற்கு இன்னொரு காரணமும் இருந்தது.

ஒருமுறை சம்பந்தனிடம் “மஇகாவில் படித்த அறிவாளிகளோ, பட்டதாரிகளோ இல்லையே” என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அதற்கு அவர் “மஇகாவில் எனக்கு படித்த அறிவாளிகள் (இன்டெலக்சுவல்ஸ்) தேவையில்லை, நான் சாதாரண மக்களைக் கொண்டே கட்சியை நடத்துவேன்” என்ற தொனியில் பதிலளித்திருந்தார். அது என்னைப் போன்ற படித்த இளைஞர்களிடையே  அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதுவும் அந்தப் போராட்டத்தில் நான் சம்பந்தனை எதிர்க்கக் காரணமாக இருந்தது.

டான்ஸ்ரீ ஆதி.நாகப்பன்

எனினும் நான் நேரடியாக சம்பந்தனுக்கு எதிரான பிரச்சாரங்களிலோ செயல்களிலோ கலந்து கொள்ளவில்லை. ஆதி.நாகப்பனுடன் கூட்டங்களுச் செல்வேன். மஇகா தலைமையகத்திற்கு சில சமயங்களில் அவர் சந்திப்புகள் நடத்தும்போது உடன் செல்வேன். அவ்வளவுதான்.

அந்தத் தலைமைத்துவப் போராட்டத்தில் சம்பந்தன் பதவி விலகி, மாணிக்கவாசகம் 1973-இல் தேசியத் தலைவரானார்.

சம்பந்தனிடம் இருந்து வந்த
தொலைபேசி அழைப்பு

நான் நான்கு ஆண்டுகள் ஆதி.நாகப்பன் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு சொந்தமாக எனது வழக்கறிஞர் அலுவலகத்தை நடத்திக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு தொலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. “நான் துன் சம்பந்தன் பேசுகிறேன். நான் உங்களை வந்து பார்க்க வேண்டும்” என மறுமுனையில் குரல் கேட்டது.

அதுவரையில் நான் சம்பந்தனுடன் எந்தவித தொடர்புகளும் கொண்டிருக்கவில்லை என்பதால் எனக்கு யாரோ தொலைபேசியில் அழைத்து கிண்டல் செய்கிறார்கள் எனத் தோன்றியது. எனவே நான் “யாருய்யா இது! என்ன விளையாடறீங்களா? வைய்யா போனை” எனக் கடுமையாகக் கூறிவிட்டு தொலைபேசி அழைப்பை துண்டிக்க முற்பட்டேன்.

ஆனால், அவரோ “தம்பி!தம்பி! நான் உண்மையிலேயே துன் சம்பந்தன்தான் பேசுகிறேன். ஒரு வழக்கு விவகாரமாக உங்களை வந்து பார்க்க வேண்டும்” என்றார்.

நானும் சுதாரித்துக் கொண்டு “மன்னித்துக் கொள்ளுங்கள் துன். நான் யாரோ என்னிடம் போனில் விளையாடுகிறார்கள் என நினைத்தேன். நீங்கள் வந்து என்னைப் பார்ப்பதா? வேண்டாம். நானே உங்களை வந்து பார்க்கிறேன்” என்றேன்.

கல்லிமார்ட் ரோட் சாலையில் (Guillemard Road) அமைந்திருந்த அவரின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்தேன்.

(கல்லிமார்ட் சாலைதான் இப்போது ஜாலான் டூத்தாவாக பெயர் மாற்றம் கண்டிருக்கிறது)

வீராசாமி தோட்டம் ஏலம் விடப்பட்ட வழக்கு

அதுதான் சம்பந்தனுடனான எனது முதல் நேரடி சந்திப்பு. சம்பந்தன் என்னை வரவேற்று தனது நிலைமையை விளக்கினார். “எங்களின் குடும்ப சொத்தான வீராசாமி தோட்டம் சில பிரச்சனைகளால் ஏலம் விடப்பட்டு விட்டது. எங்களின் வழக்கறிஞர்கள் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்து விட்டார்கள். மற்ற சில வழக்கறிஞர்களையும் சென்று கண்டோம். அவர்களும் இனிமேல் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி, வழக்கை ஏற்று நடத்த மறுத்துவிட்டார்கள். (டான்ஸ்ரீ) ஏ.தர்மலிங்கம்தான்  உங்கள் பெயரைச் சொல்லி அவரைப் போய் பாருங்கள். அவர் நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்துவதில் வல்லவர் என்று கூறினார். அதனால்தான் உங்களை அழைத்தேன். ஏதாவது செய்ய முடியுமா என்று பாருங்கள்” என்றார் சம்பந்தன்.

(பிரபல சொத்துடமை வணிகரான தர்மலிங்கம், 1955-ஆம் ஆண்டில் முதன் முதலில் சம்பந்தன் மஇகா தலைவராகப் போட்டியிட்டபோது அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் ஒருவராவார்)

நானும் வழக்கு சம்பந்தமான ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு, “எனக்கு சிறிது அவகாசம் கொடுங்கள். வழக்கு விவரங்களை நன்கு படித்து விட்டு, ஏதாவது செய்ய முடியுமா” என்று பார்க்கிறேன் என விடைபெற்றுக் கொண்டேன்.

அடுத்து பல நாட்கள் அந்த வழக்கைத் துல்லியமாக ஆராய்ந்து, சில குறைகளையும் தவறுகளையும் கண்டுபிடித்து, வீராசாமி தோட்டம் ஏலம் விடப்பட்டதை எதிர்த்து வழக்கு மனுவைச் சமர்ப்பித்தேன். அந்த சட்டப் போராட்டத்தில் வெற்றியும் பெற்றேன். வீராசாமி தோட்டம் மீதான ஏலம் ரத்து செய்யப்பட்டது. தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் இருந்த சம்பந்தனின் சகோதரர்கள் மீனாட்சி சுந்தரம், கிருஷ்ணன் இருவரும் என்னைக் கட்டிப் பிடித்துப் பாராட்டிக் கண்கலங்கினர்.

அதற்குப் பின்னர் ஒவ்வோர் ஆண்டும் வீராசாமி தோட்டத்திலிருந்த ஆலயத்தில் அந்தத் தோட்டம் ஏலத்தில் இருந்து மீட்கப்பட்ட வழக்கில் வெற்றி பெற்ற நாளை சிறப்புப் பூசைகள் செய்து கொண்டாடுவார்கள். என்னையும் அழைப்பார்கள். நானும் சில முறை கலந்து கொண்டிருக்கிறேன். (அந்த வீராசாமி தோட்டம் இன்னும் சுங்கை சிப்புட்டில் சம்பந்தன் குடும்பத்தினரின் மேற்பார்வையில் இருக்கிறது)

துன் ரசாக்குடன் துன் சம்பந்தன்

வழக்கில் வெற்றி பெற்று தங்களின் குடும்ப சொத்தை மீட்டதற்காக, என்னை மிகவும் பாராட்டிய சம்பந்தன், அவர் தலைவராக இருந்த தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்திற்கான வழக்கறிஞர்களில் ஒருவராக என்னை நியமித்தார். அவருடனான எனது தொடர்புகளும் வளரத் தொடங்கியது. சில முறை என்னை தேநீர் உபசரிப்புக்கு அழைத்து நீண்ட நேரம் உரையாடினார். அந்த உரையாடல்களை நான் விரும்பி ரசித்தேன். அவரின் அரசியல் வாழ்க்கை குறித்த பல விவரங்களை அந்த சமயங்களில் என்னுடன் பகிர்ந்து கொண்டார். அவருடனான உரையாடல்களின் மூலம் நானும் அவரிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டேன்.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளிலேயே அவர் அகால மரணமடைந்தது (18 மே 1979-ஆம் நாள் சம்பந்தன் காலமானார்) இந்த சமுதாயத்திற்கும், எனக்கும் தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த பேரிழப்பாக உணர்ந்தேன். அவரின் இறுதிச் சடங்கிலும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினேன்.

சம்பந்தனிடம் நான் கண்ட சிறந்த குணாதிசயங்கள்

தனது நடை, உடை, பாவனைகளில் இயல்பாகவே கம்பீரத்தைக் கொண்டிருந்தவர் சம்பந்தன். மேடைப் பேச்சில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அழகாகவும், கம்பீரமாகவும் உரையாற்றும் அவரின் வல்லமையை என்னைப் பொறுத்தவரையில் இன்றுவரை நான் வேறொருவரிடத்தில் கண்டதில்லை. தமிழ்ப் புலமையும், ஆங்கிலப் புலமையும் அவருக்கு ஒரு சேர அமைந்தது.

பழகுவதற்கும் இனிமையானவர். பண்பாளர். அவர் நிறையப் படித்த அறிவாளி. நூல்களை நிறைய அளவில் வாசிக்கும் பழக்கம் கொண்டவர். தனக்கென ஒரு நூல்நிலையத்தையே உருவாக்கி வைத்திருந்தார். ஒருமுறை அவருடனான சந்திப்பின்போது கார்ல் சேகன் (Carl Sagan – அறிவியல், வான்வெளி, பிரபஞ்சம் குறித்து நிறைய ஆராய்ச்சி நூல்கள் வெளியிட்ட அறிவியலாளர்) எழுதிய நூல் ஒன்றை எனக்குப் பரிசளித்துப் படிக்கும்படி கூறினார்.

என் வாழ்க்கையில் நான் சந்தித்த மனிதர்களில் – தலைவர்களில் – மறக்க முடியாத நினைவுகளைத் தந்தவராக சம்பந்தன் இன்றும் திகழ்கிறார்.

-இரா.முத்தரசன்

(15 ஜூன் 2025 – மக்கள் ஓசை ஞாயிறு பதிப்பில் இடம் பெற்ற கட்டுரை)