Home நாடு யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு!

யூசோப் ராவுத்தர் விடுதலைக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு!

90
0
SHARE
Ad
யூசோப் ராவுத்தர்

புத்ரா ஜெயா: பிரதமருக்கு எதிராக பாலியல் புகார் கூறி, பொது வழக்கு (சிவில்) தொடுத்திருக்கும் யூசோப் ராவுத்தர் மீது, போலித்துப்பாக்கிகள் வைத்திருந்தது, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களுக்காக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். எனினும் கடந்த ஜூன் 12-ஆம் தேதி கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் யூசோப் ராவுத்தர் மீதான குற்றவியல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி அவரை விடுதலை செய்தது. அந்தத் தீர்ப்பை எதிர்த்து சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு செய்துள்ளது.

யூசோப் ராவுத்தர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முன்னாள் உதவியாளராவார்.

யூசோப் ராவுத்தர் மீதான தீர்ப்பைத் தொடர்ந்து, அந்தத் தீர்ப்பு குறித்தோ, இந்த விவகாரம் குறித்தோ ஆரூடங்கள் கூறுவதையும் வதந்திகள் பரப்புவதையும் நிறுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கையை சட்டத் துறை அலுவலகம் விடுத்தது. இந்த அறிக்கைக்கும் வழக்கறிஞர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

#TamilSchoolmychoice

கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி காலை 10.15 மணியளவில் கோலாலம்பூர் காவல் துறை தலைமையகத்திற்கு வெளியே உள்ள மசூதியில் நிறுத்தப்பட்டிருந்த காரில் 305 கிராம் கனாபிஸ் போதைப் பொருளைக் கடத்தியதாக யூசோப் ராவுத்தர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அபாயகரமான போதைப் பொருள் சட்டம் 1952-இன் கீழ் பிரிவு 39B(1)(a) -இன்படி அவருக்கு மரண தண்டனையோ, 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையோ, குறைந்தது 12 பிரம்படிகளோ தண்டனையாக விதிக்கப்படலாம்.

மேற்குறிப்பிட்ட அதே நாளில் (6 செப்டம்பர் 2024) காலை 9.25 மணியளவில், ஜாலான் புக்கிட் கியாராவில் உள்ள அடுக்ககக் குடியிருப்பு அருகில் இரண்டு போலியான சுடும் ஆயுதங்கள் வைத்திருந்ததாகவும் அவர் மீது 1960-ஆம் ஆண்டு ஆயுதங்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் ஓராண்டு சிறைத்தண்டனை, 5 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேற்போகாத அபராதம், அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளில் இருந்தும் யூசோப் ராவுத்தரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்திருக்கிறது.

யூசோப் ராவுத்தர் தன்மீது தொடுத்துள்ள பொது வழக்கில் தனக்கு சட்ட விலக்களிப்பு வழங்கப்படுமா என்பது குறித்து அன்வார் இப்ராகிம் வழக்கொன்று தொடுத்துள்ளார். 

அந்த வழக்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்காகக் காத்திருக்கிறது. யூசோப் ராவுத்தரின் பொது வழக்கு தொடர்ந்து நடைபெறுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையும் விதித்திருக்கிறது.