கோலாலம்பூர் : இன்று, 14 ஜூன் 2025, தேசிய ஊடகவியலாளர் நாள் (HAWANA) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மலேசியா மீடியா கவுன்சில் என்னும் மலேசிய ஊடக மன்றம் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரப்படியாக அமலுக்கு வந்தது. ஊடகவியலாளர் நாள் கொண்டாட்டத்தில் உரையாற்றிய தொடர்புத் துறை அமைச்சர் பாஹ்மி பாட்சில் இதன் தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்டார்.
ஊடக மன்றத்தின் 12 பேர் கொண்ட உறுப்பினர்களையும் அவர் அறிவித்தார். மலேசியாகினி ஊடகத்தின் பிரதிநிதியாக பிரமேஷ் சந்திரன், மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோரும் இந்த மன்றத்தில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.
ஊடகத் துறையைச் சேர்ந்தோர் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேல் எதிர்பார்த்தது இப்போது நனவாகியுள்ளது. இது நாட்டின் பத்திரிகைத் துறையில் இடம்பெற்ற முக்கியமான மறுமாற்றங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இன்றைய நிகழ்ச்சியில் ஊடகச் சூழலை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், ஊடக நிறுவனங்கள் இலக்கவியலுக்கு மாறுதல், செயற்கை நுண்ணறிவு (AI) கற்றுக்கொள்ளும் பணிகளை முன்னெடுத்தல் ஆகிய முயற்சிகளுக்கு 30 மில்லியன் ஒதுக்குவதாக அறிவித்தார்.
இந்த ஆண்டுக்கான ஹாவானா மாநாட்டை பெருமையுடன் நடத்திய பெர்னாமா நிறுவனத்திற்கும் தொடர்புத் துறை அமைச்சர் பாஹ்மி பாட்சில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.
ஊடகவியலாளர்களுக்கான ஏர் ஆசியாவின் சிறப்பு சலுகை
மலேசிய ஊடக அடையாள அட்டை வைத்திருக்கும் ஊடகவியலாளர்கள் ஆசியான் நாடுகளுக்குள் செல்லும் 57 தளங்களுக்கு சென்று வருவதற்கு 50% தள்ளுபடியுடன் விமான டிக்கெட் (ஒரே முறை) வழங்கும் ஏர் ஆசியாவின் சலுகைக்கு அதன் உரிமையாளர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டசுக்கும், பாஹ்மி பாட்சில் நன்றி தெரிவித்தார்.
மேலும், இன்றைய நிகழ்ச்சியில் நாட்டின் மூத்த பத்திரிகையாளர்கள் சிலருக்கு மருத்துவ சிகிச்சைக்கான நிதி உதவிகளை ஹாவானா நிதியில் இருந்து பிரதமர் நேரடியாக வழங்கினார்.