Home நாடு மீண்டும் ஒரு ‘செப்டம்பர் 16’ முயற்சியில் இறங்கப்போவதில்லை – அன்வார் உறுதி

மீண்டும் ஒரு ‘செப்டம்பர் 16’ முயற்சியில் இறங்கப்போவதில்லை – அன்வார் உறுதி

454
0
SHARE
Ad

Untitled-1

பெட்டாலிங் ஜெயா, மே 7 – 13 ஆவது பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அரசாங்கத்தை அமைத்துள்ள தேசிய முன்னணியின் ஆட்சியை வீழ்த்துவதற்கு, கடந்த தேர்தலில் தான் செய்த ‘செப்டம்பர் 16’  முயற்சியை இம்முறை செய்யப்போவதில்லை என அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்று அரசாங்கத்தை அமைத்த பிறகு, அக்கட்சியைச் சேர்ந்த 30 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசிய தினத்தன்று, மக்கள் கூட்டணியுடன் இணையப்போவதாக எதிர்கட்சித் தலைவரான அன்வார் திடீர் அறிவிப்பு செய்தார்.

#TamilSchoolmychoice

இதனால் தேசிய முன்னணி ஆட்சி கவிழ்க்கப்பட்டு, மக்கள் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கப்போவதாக மக்களிடையே பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால் அன்வாரின் அம்முயற்சி அப்ப்போது பலனளிக்கவில்லை.

எனவே தற்போது தேசிய முன்னணி வெற்றி பெற்றுள்ளதால், அன்வார் அது போன்ற முறைகளை கையாள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது போன்ற முயற்சிகளை தான் செய்யப்போவதில்லை என்று அன்வார் உறுதியாகக் கூறியுள்ளார்.

இருப்பினும் ஆவி வாக்காளர்கள்,  பணம் கொடுத்து வாக்குகளை வாங்கியது பொன்ற தேர்தல் முறைகேடுகளின் மூலம் வெற்றி பெற்றுள்ள தேசிய முன்னணி, தொடர்ந்து ஆட்சியில் இருப்பது கேள்விக்குறி தான் என்று அன்வார் கூறியுள்ளார்.

மொத்த வாக்குகளில் தேசிய முன்னணி பின்னடைவு

பொதுத்தேர்தலில் 133 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றுள்ள தேசிய முன்னணியில் இருந்து, 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியிலிருந்து விலகி,  மக்கள் கூட்டணியுடன் இணையும் பட்சத்தில் மக்கள் கூட்டணி அரசாங்கம் அமைக்க வாய்ப்பு உள்ளது.

கட்சிவாரியான வாக்குகள் கணக்கெடுப்பின் படி, தீபகற்ப மலேசியாவில் மொத்த வாக்குகளில் மக்கள் கூட்டணிக்கு 53.29 விழுக்காடு வாக்குகளும், தேசிய முன்ணிக்கு 45.74 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன.

அதே போல் சபா, சரவாக் மாநிலங்களில் மக்கள் கூட்டணிக்கு 50.87 விழுக்காடு வாக்குகளும், தேசிய முன்ணிக்கு  47.38 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன. மொத்தமுள்ள 505 சட்டமன்ற தொகுதிகளில் 230 இல் தேசிய முன்னணி தோல்வியைத் தழுவுயுள்ளது.

இவ்வாறு தேர்தல் முடிவுகள் அனைத்தும் தேசிய முன்னணிக்கு பெரும் பின்னடைவாகவே இருப்பதால், தேசிய முன்னணி வெற்றி பெற்றதற்கான சட்டப்பூர்வ நிலை இன்னும் உறுதியாகவில்லை என்று அன்வார் மீண்டும் மீண்டும் கூறிவருகிறார்.

மலாய்காரர்களின் வாக்குகள் கிடைக்கவில்லையா?

மக்கள் கூட்டணிக்கு மலாய்காரர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை என்பதை அன்வார் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

காரணம் மலாய் வாக்குகள் அதிகம் நிறைந்த தொகுதிகளான மலாக்காவிலுள்ள புக்கிட் கட்டில் மற்றும் புக்கிட் பாருவில் பிகேஆரும், பாஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளதை சுட்டிக்காட்டிய அன்வார்,  கிளந்தான், திரங்கானு, சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலும் மலாய் வாக்குகள் தேசிய முன்னணிக்கு எதிராக திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜோகூர் பாருவில் நடைபெற்ற பிரச்சாரக்கூட்டங்களில் 80 விழுக்காடு மலாய்க்காரர்களே கலந்து கொண்டனர் என்றும், நாடு முழுக்க பெருமளவு மலாய்காரர்கள் மக்கள் கூட்டணியை ஆதரித்துள்ளனர் என்றும் அன்வார் தெரிவித்தார்.

தேர்தல் முறைகேடுகள் மட்டும் இல்லாவிட்டால் நிச்சயம் மக்கள் கூட்டணி தான் இம்முறை தேர்தலில் வெற்றி பெற்றிருக்கும். அந்த அளவிற்கு மக்கள், தேசிய முன்னணி அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளனர் என்று மீண்டும் ஒரு முறை அன்வார் வலியுறுத்தினார்.