Home நாடு “அடிப்படை ஆதாரங்களின்றி கருத்துக்களை வெளியிட வேண்டாம்”- அஸ்மின் அலிக்கு சிலாங்கூர் பாஸ் கட்சி அறிவுரை

“அடிப்படை ஆதாரங்களின்றி கருத்துக்களை வெளியிட வேண்டாம்”- அஸ்மின் அலிக்கு சிலாங்கூர் பாஸ் கட்சி அறிவுரை

527
0
SHARE
Ad

Azmin Aliசிலாங்கூர், மே 10 – சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமையை சீர்குலைக்கும் விதமாக, அடிப்படை ஆதாரமற்ற அறிக்கைகளை அம்மாநில பிகேஆர் கட்சி தலைவர்கள் சிலர் வெளியிட்டு வருவதற்கு பாஸ் இளைஞர் பிரிவு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சிலாங்கூர் மாநில பாஸ் இளைஞர் துணைத் தலைவர் சானி ஹம்சான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி பிகேஆருக்குச் சொந்தமானது என்ற எண்ணத்தில் பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலி, மகளிர் தலைவி சுராய்டா,மாநில தலைமைத்துவ மன்ற உறுப்பினர் ஷுஹாய்மி ஆகிய தலைவர்கள் விடுக்கும் அறிக்கைகள் மிகவும் பேராசை நிறைந்தவையாக இருக்கின்றன.

#TamilSchoolmychoice

அவர்கள் இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற அறிக்கைகளை வெளியிடுவதற்கு முன் சட்டமன்றங்களின் உண்மை நிலையை உணரவேண்டும். மாநில சட்டமன்ற பாஸ் மற்றும் ஜசெக வை விட தங்களுக்கு அதிகமான இடங்கள் இருப்பதாக சிலாங்கூர் மாநில பிகேஆர் எண்ணக்கூடாது” என்று தெரிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் ஜசெக வும், பாஸ் கட்சியும் தலா 15 இடங்களையும், பிகேஆர் 14 இடங்களையும்  வைத்துள்ளது.

அதே நேரத்தில் சிலாங்கூர் மாநிலத்தில் பிகேஆர் வெற்றி பெற்றால், அம்மாநில மந்திரி பெசார் பதவி பிகேஆர் கட்சியை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் என்று கூட்டணிக்கட்சிகளுக்குள் ஒப்பந்தம் ஏதும் செய்யப்படவில்லை என்று கூறிய  சானி ஹம்சான், மாநில பக்காத்தான் தலைமைத்துவம் எடுக்கும் எந்த முடிவுக்கும் சிலாங்கூர் மாநில பாஸ் இளைஞர் பிரிவு  கட்டுப்படும், மதிக்கும், ஆதரிக்கும் என்று தெரிவித்தார்.

அதோடு இப்பிரச்சனைக்கு விரைவில் சுமூகத் தீர்வு எடுக்கப்படும் என்று தான் நம்புவதாகவும் சானி ஹம்சான் தெரிவித்துள்ளார்.