Home அரசியல் சாஹிட் ஆணவத்துடன், முட்டாள்தனமாக நடந்து கொள்கின்றார் – அஸ்மின் அலி சாட்டை

சாஹிட் ஆணவத்துடன், முட்டாள்தனமாக நடந்து கொள்கின்றார் – அஸ்மின் அலி சாட்டை

628
0
SHARE
Ad

Azmin Aliமே 19 – புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உள்துறை அமைச்சர் சாஹிட் ஹாமிடி பொதுத் தேர்தல் நடைமுறைகளில் திருப்தியில்லாதவர்கள் வேறு நாடுகளுக்கு குடியேறலாம் எனக் கூறியுள்ளது குறித்து கருத்துரைத்த பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி, “சாஹிட் ஓர் ஆணவக்காரர், முட்டாள்தனமாக பேசியுள்ளார்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.

இன்று தான் வெளியிட்ட அறிக்கையொன்றில் அஸ்மின் அலி, அகமட் சாஹிட்டின் அறிக்கையிலிருந்து, பிரதமர் நஜிப்பின் உருமாற்றக் கொள்கைகள்  போலித்தனமானது என்பது தெளிவாகியுள்ளது எனக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“எனது புதிய உருமாற்ற அமைச்சரவை” என நஜிப் கூறியுள்ளது இதைத்தானா என்றும் அஸ்மின் அலி கேள்வி எழுப்பியுள்ளார்.

“நன்றாக செய்திருக்கிறீர்கள் சாஹிட்! அமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் நீங்கள் விடுத்திருக்கும் அறிக்கை உங்களின் ஆணவத்தையும், முட்டாள்தனத்தையும் காட்டுவதாக அமைந்துள்ளது” என்றும் அஸ்மின் அலி சாடியுள்ளார்.

“எங்களைப் பொறுத்தவரையில் இந்த நாட்டுடன் எங்களுக்கு எந்தவித சச்சரவும் இல்லை. காரணம் இந்த நாடு எப்போதும் நாங்கள் வாழ்ந்து வரும் மண்ணாகும். இந்த நாடு உங்களுடையதும்தான். ஆனால், இந்த நாட்டுக்கு  நீங்களும் அம்னோவும் மட்டும்தான் உரிமையானவர்கள் என்பது போன்று பேசியுள்ளீர்கள். நாங்களும்  மலேசியக் குழந்தைகள்தான். எங்களுக்கும் இந்த நிலத்தில் உரிமை உண்டு.நாங்களும் பேரரசருக்கும், நாட்டுக்கும் விசுவாசமானவர்கள்தான்” என்றும் அஸ்மின் அலி மேலும் கூறியுள்ளார்.

“நாட்டின் தேர்தல் நடைமுறைகள் முறையானதாக – தூய்மையானதாக இல்லையென்றால் அதைப்பற்றி கேள்வி எழுப்ப, தங்களின் மாற்றுக் கருத்துக்களைப் பதிவு செய்ய – தங்களின் அதிருப்தியை – ஆத்திரத்தைப் பதிவு செய்ய, மக்களுக்கு ஜனநாயக ரீதியாகவும், அரசியல் அமைப்பு சட்ட ரீதியாகவும் உரிமை உள்ளது” என்றும் அஸ்மின் அலி கூறியுள்ளார்.

“அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த தேர்தல் முறைகேடுகளைப் பற்றி நாங்கள் குறைகூறவில்லை. மாறாக, திட்டமிடப்பட்டு நாடு முழுமையிலும், கட்டம் கட்டமாக, ஒரு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அதிக அளவிலான தேர்தல் முறைகேடுகளைப் பற்றித்தான் நாங்கள் குறை கூறியுள்ளோம். ஆனால், இதையெல்லாம் நஜிப்போ அல்லது அவரது மற்ற அம்னோ கூட்டாளிகளோ ஒப்புக் கொள்வார்கள் என எதிர்பார்ப்பதற்கு நாங்கள் அவ்வளவு தூரம் புரியாதவர்கள் அல்ல.  ஒன்று நீங்கள் ஓர் ஆரோக்கியமான விவாதத்தில் எங்களுடன் ஈடுபடலாம் அல்லது பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கலாம்” என்றும் அஸ்மின்அலி கூறியுள்ளார்.