Home 13வது பொதுத் தேர்தல் அழியா ‘மை’ நேரடியான பேச்சுவார்த்தைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது – ஷாஹிடன் தகவல்

அழியா ‘மை’ நேரடியான பேச்சுவார்த்தைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது – ஷாஹிடன் தகவல்

595
0
SHARE
Ad

amaran-shahidan-kassim-ngo-persatuan-parti-parlimenகோலாலம்பூர், ஜூலை 10 – நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியா மையானது, எந்த ஒரு இடை ஒப்பந்தமும் இன்றி நேரடியான பேச்சுவார்த்தைகள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டது என்று பிரதமர் துறை அமைச்சர் ஷாஹிடன் காசின் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில், பாஸ் கட்சியைச் சேர்ந்த செபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹனீபா மைதீன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஷாஹிடன், அழியா மையின் பாதுகாப்பையும், நம்பகத்தன்மையையும் கருத்தில் கொண்டும் அது நேரடியான பேச்சுவார்த்தைகள் மூலம்  வாங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு காரணங்களுக்காக அழியா மை விநியோகிப்பாளர் பற்றிய தகவலை வெளியிட தேர்தல் ஆணையம் விரும்பவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், ஜசெக கட்சியைச் சேர்ந்த செகாம்புட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் எழுப்பிய அழியா மை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஷாஹிடன், கடந்த மே மாதம் 2 ஆம் தேதி, ஊடகங்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட சோதனையில், சோப்பு மற்று வேறு அழிப்பான்கள் மூலம் இந்த அழியா மையை அழிக்க முடியாது என்று நிரூபிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே 5 பொதுத்தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட அழியா மைக்கு ஆன செலவு மொத்தம் 7.1 மில்லியன் ரிங்கிட் என்று ஷாஹிடன் குறிப்பிட்டுள்ளார்.

அதில் 6.9 மில்லியன் ரிங்கிட், மை மற்றும் அதை ஊற்றி வைக்க பயன்படுத்தப்பட்ட கலன்கள், தூரிகைகள் மற்றும் இதர பொருட்களுக்கு செலவானது என்றும், மீதி 200,000 ரிங்கிட் போக்குவரத்து, அதை பாதுகாத்துவைப்பதற்கு செலவானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.