கூட்டரசு பிரதேச கிளைத் தலைவர்களுடன் சந்திப்பு -தலைமைத்துவ மாற்றம் தேவை – சுப்ரா, சரவணன் வலியுறுத்தல்

    478
    0
    SHARE
    Ad

    SUBRAஜூலை 19 – ம.இ.கா கட்சியின் தலைமைத்துவ தேர்தல் தொடர்பாக, நேற்று மாலை கூட்டரசுப் பிரதேச ம.இ.கா கிளைத் தலைவர்களைச் சந்தித்த, அக்கட்சியின் துணைத்தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம், ம.இ.கா வில் அனைத்து நிலைகளிலும் நல்ல தலைமைத்துவம் தேவை என்று கூறியுள்ளளார்.

    நேற்று மாலை கோலாலம்பூரிலுள்ள ஒரு பிரபல உணவகத்தில்  இச்சந்திப்பு நடந்தது. இந்த இரவு விருந்தை ம.இ.கா உதவித் தலைவர் மற்றும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறையின் துணை அமைச்சரான ஏற்பாடு செய்திருந்தார்.

    தலைமைத்துவ போட்டி பற்றி குறிப்பிடவில்லை!

    #TamilSchoolmychoice

    இருப்பினும் இச்சந்திப்பிற்குப் பிறகு, எதிர்வரும் ம.இ.கா தலைமைத்துவ தேர்தலில் தான் போட்டியிடுவது பற்றி சுப்ரா எதையும் குறிப்பிடவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட கிளைத்தலைவர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,” சுப்ராவும்,சரவணனும் இவ்விருந்தில் பேசினார்கள். ஆனால் தலைமைத்துவ தேர்தல் குறித்து எதையும் அவர்கள் குறிப்பிடவில்லை. ம.இ.கா வில் உடனடியாக தலைமைத்துவ மாற்றம் வேண்டும். அப்போது தான் அடுத்த பொதுத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை 3 ஆண்டுகளுக்குளில் தயார் செய்ய முடியும் என்று மட்டுமே கூறினார்கள்” என்று தெரிவித்தார்.

    ஆனால் கிளைத் தலைவர் சொன்ன தகவலை வைத்துப் பார்க்கும் போது, தலைமைத்துவ தேர்தலுக்கு அவர்கள் ஆயத்தமாவது தெளிவாகத் தெரிகிறது. இல்லையென்றால், ஏன் அவர்கள் தலைமைத்துவ மாற்றம் தேவை என்று கூற வேண்டும்? ஏன் தேசியத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய கிளைப் பேராளர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுடன் சந்திப்புக் கூட்டம் நடத்த வேண்டும்?

    தனது உரையில் டாக்டர் சுப்ரா, நடந்து முடிந்த 13 வது பொதுத்தேர்தலுக்கு முன் பிரதமர் தன்னிடம் கூறும்போது, செகாமட் தொகுதி பாதுகாப்பானது இல்லை என்று தெரிந்தால், வேறு தொகுதிக்கு மாற்றிக் கொள்ளும் படி கூறினார். ஆனால் நான் பயந்து கொண்டு ஓடவில்லை அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன் என்று சுப்ரா கூறியுள்ளார்.

    இதன்மூலம், பழனிவேல் தொகுதி மாறி பாதுக்காப்பான தொகுதி என்று கருதப்பட்ட, கேமரன் மலையில்  போட்டியிட்டதை மறைகமாக சுப்ரா சுட்டிக்காட்டியுள்ளார்.

    அதோடு, அடுத்த பொதுத்தேர்தலுக்குள் ம.இ.கா வில் அனைத்து நிலைகளிலும், இளம் தலைவர்களை நியமித்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் சுப்ரா கூறியுள்ளார்.

    தலைமைத்துவ மாற்றம் வேண்டும் என்பது தான் சரவணனின் கருத்தும்!M Saravanan

    ம.இ.காவின் கூட்டரசுப் பிரதேச மாநில தலைவரான சரவணனும் தலைமைத்துவ மாற்றம் தேவை என்று கூறியிருக்கிறார்.

    மேலும், சுகாதாரத்துறை என்பது அமைச்சரவையில் மிக முக்கியமான ஒரு துறை, பிரதமர் நஜிப், சுப்ராவை அந்த துறையில் நியமித்திருப்பதிலிருந்தே சுப்ராவின் தலைமைத்துவத்தின் மீது அவர் கொண்ட நம்பிக்கையைக் காட்டுகிறது என்றும் சரவரணன் கூறியுள்ளார்.

    சுப்ரா – சரவணனின் பிரச்சாரக் குழு!

    இந்த இரவு விருந்தின் மூலம் சுப்ரா மற்றும் சரவணன் குழுவினர் இணைந்து பிரச்சாரம் செய்யப்போவது தெளிவாகிறது.

    இந்த சந்திப்பில் ம.இ.கா இளைஞர் அணித் தலைவர் டி.மோகன், ஜோகூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் அசோகன், கெடா தலைவர் பதவியில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட எஸ்.ஆனந்தன் மற்றும் பேராக் சபாநாயகர் எஸ்.கே தேவமணி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மத்திய செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்ட எஸ்.வேள்பாரியும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    வேள்பாரி கூட்டரசுப் பிரதேச ம.இ.காவின் கிளைத் தலைவர்களுள் ஒருவரும் ஆவார்.

    எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ம.இ.கா தலைவர் பதவிக்கான வேட்புமனு தாக்கலும், செப்டம்பர் 22 ஆம் தேதி தேர்தலும் நடக்கவுள்ளது.