Home நாடு மாணவர்கள் முன் மன்னிப்பு கேட்டார் ஆலம் மேகா பள்ளி தலைமையாசிரியை!

மாணவர்கள் முன் மன்னிப்பு கேட்டார் ஆலம் மேகா பள்ளி தலைமையாசிரியை!

509
0
SHARE
Ad

A Prakash Raoஷா ஆலம், ஆகஸ்ட் 3 – இஸ்லாம் அல்லாத மாணவர்களை இந்தியா, சீனாவிற்கே திரும்ப செல்லுங்கள் என்று கூறிய எஸ்எம்கே ஆலம் மேகா பள்ளியின் தலைமையாசிரியை யாதி டானி, நேற்று ஒன்றுகூடலின் போது அப்பள்ளியின் அனைத்து மாணவர்கள் முன்னும் மன்னிப்பு கேட்டார்.

தலைமையாசிரியை மன்னிப்பு  கேட்கும் போது அங்கிருந்த பெற்றோர்கள் சிலர் கூறிய தகவலை அடுத்து, ஷா ஆலம் தொகுதி ம.இ.கா துணைத் தலைவர் பிரகாஷ் ராவ்(படம்) இதை உறுதிப்படுத்தினார்.

மேலும், இனி கல்வித்துறை அமைச்சகம் தான் அவர் மீது மேலும் நடவடிக்கை எடுப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் பிரகாஷ் ராவ் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

யாதி தனது மன்னிப்பு உரையில் கூறியிருப்பதாவது, “இப்பள்ளியில் எனது தலைமை காலத்தில், நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக கடந்தவாரம் நடந்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேச பக்தி பாடல்களைப் பாடும் போது சில மாணவர்கள் பேசிக்கொண்டு இருந்ததால் நான் கோபமடைந்து திட்டியது பிரச்சனையாகிவிட்டது”

“என்னை பொறுத்தவரை இனம் பாகுபாடு இன்றி அனைத்து மாணவர்களிடமும் இந்த நாட்டின் கலாச்சாரத்திற்கும், நாம் இருக்கும் சமுதாயத்திற்கும் மரியாதை கொடுங்கள் (di mana bumi dipajak, di situlah langit dijunjung)  என்று கூறுவேன். வரும் நாட்களில் எல்லாம் சிறப்பாக நடக்க தவறுகளை மன்னிப்பதே சிறந்த வழி. ஒரு தலைமையாசிரியராக நான் எல்லா மாணவர்களையும் எண்ணி பெருமையடைகிறேன். உங்களின் மீது அன்பு வைத்திருக்கிறேன்” என்று கண்ணீரோடு கூறியதாக அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஜூலை 22 ஆம் தேதி, பள்ளியின் ஒன்றுகூடலின் போது தேசிய கீதம் பாடிக்கொண்டிருந்த வேளையில் பேசிக்கொண்டு இருந்த இஸ்லாம் அல்லாத மாணவர்களை நோக்கி யாதி, இந்தியா, சீனாவிற்கே செல்லுங்கள் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.