புதுடெல்லி, செப். 28– 43 வயது ராகுல் இப்படி அதிரடியாக பேசுவார் என்று 81 வயது மன்மோகன் சிங் கொஞ்சம் கூட எதிர் பார்க்க வில்லை.
எதிர்க்கட்சிகள் எப்படி விமர்சனம் செய்தாலும், எவ்வளவு புழுதிவாரித் தூற்றினாலும் புயலுக்கே அசராத ஆலமரம் மாதிரி நிற்கும் பிரதமர் மன்மோகன் சிங், ராகுலின் மரியாதை குறைவான பேச்சால் மனம் நொந்து போய் விட்டார்.
பிரதமர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள விரும்புவதாக கூறினார். இதை கேட்டதும் சோனியா கடும் அதிர்ச்சி அடைந்தார். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுத்து விட வேண்டாம் என்று கெஞ்சி கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுல்காந்தி அவசரம், அவசரமாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஒரு இ–மெயில் செய்தி அனுப்பினார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–
அவசரச் சட்டத்தை கொண்டு வரும் முடிவை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு சாதகமாக்க முயல்கின்றன. எனவேதான் நான் இப்படியொரு கருத்தை வெளியிட்டேன்.
நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். இக்கட்டான சூழ்நிலையில் நீங்கள் அரசை வழி நடத்தி வருகிறீர்கள். எனவே நான் எதற்காக இப்படி பேசினேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
பிரதமர் உடனே பதவி விலகுவது நல்லது என்று பா.ஜ.க. தலைவர்கள் கூறி வருகிறார்கள். இதனால் மன்மோகன்சிங் சட்ட நிபுணர்களுடன் பதவி விலகுவது பற்றி ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஆலோசகர் சஞ்சய் இந்த விவகாரத்தில் ஆவேச கருத்தை வெளியிட்டுள்ளார். ராகுல் பேச்சு வரம்பு மீறியது. இதற்காக அவர் உடனே பதவி விலக வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் ராகுல்காந்தியின் திடீர் பேச்சு, திட்டமிட்ட நாடகம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசரச் சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுக்க மாட்டார் என்பது உறுதியாகி விட்ட நிலையில், அந்த கறையை துடைக்க திடீரென ராகுலை பேச வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ராகுல் இப்படி நல்லவர் போல பேசுவதால் அவரது இமேஜூம் உயரும் என்று எதிர்பார்த்து ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்க காங்கிரசார் நாடகம் நடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
மொத்தத்தில் இந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கை பலிகடா ஆக்கியுள்ளனர்.