Home அரசியல் உள்துறை அமைச்சருக்கு சட்டம் குறித்த அடிப்படை அறிவு தேவை – அன்வார் சாடல்

உள்துறை அமைச்சருக்கு சட்டம் குறித்த அடிப்படை அறிவு தேவை – அன்வார் சாடல்

465
0
SHARE
Ad

Anwar-Ibrahim-565x375கோலாலம்பூர், அக் 10 – குற்றங்களை ஒடுக்க காவல்துறை முதலில் சுடவேண்டும் பின்பு தான் விசாரணையெல்லாம் என்று அறிக்கை விடுத்த உள்துறை அமைச்சர் சாஹிட் முதலில் அடிப்படை கொள்கைகளைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அகமட் சாஹிட் ஒரு தவறான மற்றும் அபாயகரமான அறிக்கையை விடுத்திருக்கிறார். குற்றவியல்  சட்டம் குறித்து அரசாங்கம் அவருக்கு உடனடியாக பாடம் நடத்த வேண்டும்” என்று பிகேஆர் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கடந்த மலாக்காவில் பாதுகாப்பு குறித்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் சாஹிட் ஹமீடி, அங்கு செய்தியாளர்கள் இருப்பதை அறியாமல் பல உண்மைகளை உளறிக் கொட்டினார் என்றும், பின்னர் செய்தியாளர்கள் இருக்கிறார்கள் என்று அறிந்தவுடன் தான் கூறியவற்றை பிரசுரிக்கக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

#TamilSchoolmychoice

மலாக்கா, ஆயர் குரோ, அனைத்துலக வாணிக மையத்தில் சாஹிட் ஆற்றிய உரையில், குண்டர் கும்பல் என்று அடையாளம் காணப்பட்ட 40,000 பேரில் 28,000 க்கு மேற்பட்டோர் இந்தியர்கள் என்றும் அவர்களைக் கைது செய்வதில் தவறேதும் இல்லை என்றும் சாஹிட் கூறினார்.

“இந்த குண்டர் கும்பலால்  மலாய் இனத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டுள்ளனர், திருடப்பட்டுள்ளனர். இதற்கு என்ன தான் தீர்வு? இனி அந்த குண்டர்களை விட்டு வைக்கக்கூடாது. குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டால் சுட்டுத்தள்ள வேண்டியது தான்” என்று சாஹிட் தனது உரையில் குறிப்பிட்டார்.