Home உலகம் மலேசியாவிற்கு தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்ய உரிமை இல்லை – சிங்கப்பூர்

மலேசியாவிற்கு தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்ய உரிமை இல்லை – சிங்கப்பூர்

549
0
SHARE
Ad

water

சிங்கப்பூர், மார்ச் 7 – கடந்த 1987 ஆம் ஆண்டு மலேசியா, சிங்கப்பூர் இடையிலான தண்ணீர் ஒப்பந்தத்தின் படி, தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யும் உரிமத்தை மலேசியா இழந்துவிட்டது என்று சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் நேற்று மலேசியாவிற்கு தண்ணீர் விலையை மறுபரிசீலனை செய்யும் உரிமம் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

#TamilSchoolmychoice

அதற்குப் பதிலளித்த சண்முகம், “மலேசியா அந்த உரிமத்தை இழந்து விட்டது.  சிங்கப்பூர், மலேசியா தண்ணீர் ஒப்பந்தத்தின் படி, கடந்த 1987 ஆம் ஆண்டே மறுபரிசீலனை செய்திருக்கலாம். ஆனால் அப்போது அப்படி செய்யவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், சிங்கப்பூரில் இந்த நிலைப்பாடு குறித்து ஏற்கனவே மலேசிய அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் சண்முகம் குறிப்பிட்டார்.

மேலும், “ஒப்பந்தத்திற்கு என்றும் மரியாதை கொடுப்போம். ஒருவேளை மறுபரிசீலனை செய்வதாக இருந்தால், சிங்கப்பூர் அரசாங்கத்திடமிருந்து நல்ல பதில் கிடைத்தால் மட்டுமே அது நடக்கும்” என்று கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி, மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் அனிபா அம்மான் கூறியதையும் சண்முகம் மேற்கோள் காட்டினார்.

மலேசியாவின் எல்லா நிலைகளிலும் நாம் நட்புறவோடு இருப்போம். இரண்டு நாட்டு மக்களும் பயனடையும் வகையில் ஒன்றாக செயல்படுவோம் என்று சண்முகம் தெரிவித்தார்.

சிங்கப்பூருக்கு தண்ணீர் வழங்குதல் தொடர்பாக மலேசியா கடந்த 1987 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்றை செய்தது. அந்த ஒப்பந்தத்தின் கால அளவு வரும் 2061 ஆம் ஆண்டு வரையுள்ளது குறிப்பிடத்தக்கது.