Home நாடு MH 370: விமானியின் அறையைக் குறிவைத்து புலனாய்வுகள் தீவிரம்!

MH 370: விமானியின் அறையைக் குறிவைத்து புலனாய்வுகள் தீவிரம்!

463
0
SHARE
Ad

MH 370 Cockpit 440 x 215மார்ச் 16 – கடந்த ஒரு வாரமாக காணாமல் போன விமானத்தைத் தேடும் பணிகளையும், புலனாய்வு விசாரணைகளையும் முன்னின்று நடத்தி வந்த மலேசியா, புலனாய்வுத் தகவல்களை மற்ற நாடுகளுடன் முறையாகப் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் ஒரு புறம் எழுந்த வேளையில் ஏழு நாட்களாகியும் காணாமல் போன விமானத்தின் தடயங்கள் எதையும் கண்டு பிடிக்க முடியாமல் மலேசிய புலனாய்வுக் குழு திணறிக் கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று புலனாய்வுக்கு உதவியாக களத்தில் இறங்கியதோடு, அமெரிக்க புலனாய்வுக் குழுவினரும் காணாமல் போன விமானத்தைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளில் தீவிரமாக இறங்கினர்.

அதனைத் தொடர்ந்து, விமானத்திற்குள் இருந்தவர்கள்தான் விமானம் செல்லும் பாதையை எடுத்துக் காட்டும் டிரான்ஸ்போண்டர் கருவிகளை செயலிழக்கச் செய்திருக்கின்றார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விமானத்தைச் செலுத்திய விமானியின் வீடுகள் சோதனையிடப்பட்டன.

ஏழு நாட்களாகியும் இந்த கோணத்தில் மலேசிய அரசாங்கம் புலனாய்வில் ஈடுபடவில்லை என்பதும் விமானியின் வீட்டை சோதனையிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விமானியின் வீட்டை தாங்கள் கண்காணித்து வந்ததாக மலேசிய காவல் துறையினர் கூறியுள்ளனர்.

புதிய தகவல்களைக் கண்டுபிடிப்பதில் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் முக்கிய பங்காற்றி வருவதாக அமெரிக்கத் தொலைக்காட்சியான சிஎன்என் கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது விமானத்தைச் செலுத்திய விமானிகள் அறையை (Cockpit)  மையமிட்டு புலனாய்வுகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

விமானத்தின் பாதையை திசை திருப்பியவர் ஒரு நிபுணராகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு புலனாய்வுத் துறை அதிகாரிகள் வந்துள்ளதால், விமானத்தைத் திசை திருப்பியது விமானிகளில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி புலனாய்வுகள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

அப்படி இல்லையென்றால், பயணிகளில் ஒருவர்தான் விமானிகள் அறைக்குள் வலுக்கட்டாயமாகவோ, அல்லது அழைப்பின் பேரிலோ உள்ளே நுழைந்து இந்த டிரான்ஸ்போண்டர் கருவியைச் செயலிழக்கச் செய்திருக்க முடியும். இந்த அடிப்படையில் இன்னொரு புறத்தில் பயணிகளின் பின்னணிகளும், அவர்களில் யாராவது விமான தொழில் நுட்பம் தெரிந்தவரா என்பது குறித்தும் புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கோணங்கள் எல்லாம் அமெரிக்க அதிகாரிகளின் நேரடி தலையீட்டுக்குப் பின்னரே வெளிச்சத்திற்கு வந்துள்ளன என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.