Home உலகம் உக்ரைன் கடற்படை தளத்தில் தாக்குதல் – ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் பதற்றம்!

உக்ரைன் கடற்படை தளத்தில் தாக்குதல் – ரஷ்யாவுடன் இணைந்த கிரிமியாவில் பதற்றம்!

412
0
SHARE
Ad

chi2கீவ், மார்ச் 20 – உக்ரைன் நாட்டிலிருந்து பிரிந்த, கிரிமியா பகுதியிலுள்ள, கடற்படை தளத்தின் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியதில், வீரர் ஒருவர் பலியானார். சோவியத் யூனியன்’ உடைந்த பின், அதில் இடம் பெற்றிருந்த உக்ரைன், தனி நாடானது.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த உக்ரைனை, ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க, மக்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அதிபராக இருந்த யானுகோவிச், இதற்கு உடன்படவில்லை. எனினும், மக்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மக்கள் புரட்சியை சமாளிக்க முடியாத, அதிபர் யானுகோவிச், ரஷ்ய எல்லையில் உள்ள கிரிமியா பகுதியில், தலைமறைவானார்.
கிரிமியாவில், ரஷ்யர்கள் அதிகம் வசிக்கின்றனர். எனவே இதை, உக்ரைனிலிருந்து தனியாக பிரிப்பது குறித்து, மக்களிடம் கருத்து ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.

#TamilSchoolmychoice

கிரிமியாவை, ரஷ்யாவுடன் இணைக்க, அப்பகுதி மக்கள் ஆதரவளித்துள்ளனர். இதையடுத்து, கிரிமியா சட்டசபை, உக்ரைனிலிருந்து சுதந்திரம் பெற்றதாக, அறிவித்தது. இதை, ரஷ்யாவின் ஒரு மாகாணமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம், மாஸ்கோவில், நேற்று முன்தினம், கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தில், ரஷ்ய அதிபர், புடின் கையெழுத்திட்டுள்ளார். இதை, அமெரிக்கா தலைமையில், ஐரோப்பிய யூனியன் நாடுகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ரஷ்யா மீது, பொருளாதார தடை விதிக்க, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகளின் இத்திட்டத்திற்கு, ஆதரவு அளிக்கப்போவதில்லை’ என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், கிரிமியாவின் செவஸ்டோபோல் நகரில் உள்ள உக்ரைன் கடற்படை தளத்தின் மீது, ரஷ்ய ஆதரவு படைகள், நேற்று, திடீர் தாக்குதல் நடத்தின.

இதில், உக்ரைன் வீரர், ஒருவர் உயிரிழந்தார். அங்கிருந்த பிற வீரர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, அந்த கடற்படை தளத்தை, ரஷ்ய ஆதரவு படைகள் கைப்பற்றி, அங்கு ரஷ்ய கொடியை ஏற்றியுள்ளன. இந்த கடற்படை தளத்தை மீட்க, உக்ரைன் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால், அங்கு போர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.