Home அவசியம் படிக்க வேண்டியவை சீனாவில் மலேசிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்!

சீனாவில் மலேசிய பயணச்சீட்டு விற்பனை நிறுத்தம்!

622
0
SHARE
Ad

24-malaysia-airlines11-600-jpgபெய்ஜிங், மார்ச் 31 – மலேசிய விமானம் MH370 மாயமானதைத் தொடர்ந்து, சீனாவில் உள்ள பயண முகவர்கள் மலேசியாவுக்கு விமான சீட்டை முன் பதிவு செய்து கொடுப்பதை அதிரடியாக நிறுத்திவிட்டனர். இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

மலேசியாவின் கோலாம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மார்ச் 8-ஆம் தேதி மாயமானது. இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து மூழ்கி இருக்கலாம் என கண்டறியப்பட்டதால்,பயணிகள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்திருக்கலாம் என கடந்த மார்ச் 24 ஆம் தேதி பிரதமர் நஜிப் துன் ரசாக் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

விமானத்தில் சென்ற 239 பயணிகளில் 156 பேர் சீனர்கள் என்பதால், இச்சம்பவம் குறித்து சீனா மிகவும் வருத்தமடைந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதுமட்டுமின்றி, விமானத்தின் ஒரு சிறிய பாகம் கூட இன்று வரையில் கண்டறியப்படாததால், சீனப் பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

மேலும், மலேசிய அரசு உண்மைகளை மறைக்கிறது என்று பயணிகளின் உறவினர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மலேசியா ஒரு ‘கொலைகார நாடு’ என்றும் வசைபாடி வருகின்றனர்.

இந்நிலையில் சீனாவில் இருந்து மலேசியா செல்லும் விமானங்களுக்கு பயணாச்சீட்டு முன்பதிவு செய்வதை சீன பயண முகவர்கள் நிறுத்தி விட்டனர். ஏற்கனவே ஏராளமான நிறுவனங்கள் தங்களது இணையத்தள  பயணச்சீட்டு முன்பதிவு இணையத் தளங்களை மூடிவிட்டன.

இதனால் விமான போக்குவரத்து வருமானம் கடுமையாக பாதிக்கும் நிலை இருப்பதாக சீன அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். சீனாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் சென்று வருகின்றனர்.

தற்போது சீனாவில் மலேசிய விமான பயணாச்சீட்டு முன்பதிவு நிறுத்தப்பட்டுள்ளதால் கடும் அவதி அடைந்துள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர். பயண முகவர்களின் இந்த நடவடிக்கை காரணமாக ஏராளமான தனியார் விமான நிறுவனங்கள் தங்களது மலேசிய போக்குவரத்து சேவையை ரத்து செய்து விட்டன.

இதுகுறித்து தனியார் விமான பயண முகவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மலேசிய விமான விபத்து குறித்து அந்நாட்டு அரசு முழுமையாக விபரங்களை வெளியிடும் வரை இந்த தடை தொடரும்” என்று எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையில், இடைக்காலப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன் பயணிகளில் யாராவது உயிருடன் இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் தேடும் பணி நடைபெறுகிறது என்று கூறியிருப்பதால், இவ்விவகாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.