Home நாடு “முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தான் மலேசியா முன்னேறும்” – ஒபாமா வலியுறுத்து.

“முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டால்தான் மலேசியா முன்னேறும்” – ஒபாமா வலியுறுத்து.

534
0
SHARE
Ad

imagesகோலாலம்பூர், ஏப்ரல் 28 – பெரும்பான்மையான முஸ்லீம் மக்களைக் கொண்ட மலேசியா, முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் சரிசமமான வாய்ப்புகளை, எல்லாத் துறைகளிலும் வழங்கினால் மட்டுமே நாடு தொடர்ந்து முன்னேற முடியும் என மலேசியாவுக்கு வருகை தந்திருக்கும் ஒபாமா வலியுறுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியாவின் அரசியல், சமூக நிலைமையை நன்கு புரிந்து கொண்டுள்ள ஒபாமா, துணிச்சலாக இந்த கருத்தை வெளியிட்டிருக்கின்றார்.

கோலாலம்பூரிலுள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தில் உள்ள டேவான் துங்கு சான்சலர் மண்டபத்தில் ஆசியான் நாடுகளில் இளைஞர்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் பேசிய ஒபாமா, முஸ்லீம் அல்லாதவர்களுக்கும் மற்றவர்களைப் போன்று அதே வாய்ப்புகள் இல்லையென்றால் நாடு கண்டிப்பாக முன்னேற முடியாது என்றார்.

இத்தகைய பாகுபாடான நடைமுறைகளால் மலேசியாவில் முஸ்லீம் அல்லாதவர்கள் எதிர்ப்புணர்வைக் கொண்டிருக்கின்றார்கள் என்பதோடு தாங்கள் அடக்கு முறைக்கு ஆளாகியிருப்பதாக உணர்கின்றார்கள் என்றும் ஒபாமா நாட்டின் நிலைமையைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்.

“இவ்வாறு பாகுபாடான நடைமுறைகளுக்கு காரணங்கள் வேண்டியதில்லை. உங்களின் அன்றாட வாழ்க்கையில் இத்தகைய போக்கை எதிர்த்து நீங்கள் பேச வேண்டும்” என்றும் ஒபாமா கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு அறிவுறுத்தினார்.

“இளைஞர்களான நீங்கள் வளர்ந்து தலைவர்களாகும் போது மக்களைப் பிரித்து இடைவெளி ஏற்படுத்தும் அரசியல் பக்கம் சாராமல், மக்களை ஒன்றிணைக்கும் அரசியல் சித்தாந்தம் பக்கம் நீங்கள் சார வேண்டும்” என பலத்த கரவொலிக்கிடையில் ஒபாமா கூறினார்.