Home அரசியல் எதிர்பார்த்தபடி நஜிப்-அன்வார் நேரடி சந்திப்பு நிகழவில்லை!

எதிர்பார்த்தபடி நஜிப்-அன்வார் நேரடி சந்திப்பு நிகழவில்லை!

580
0
SHARE
Ad

Najib-2---Sliderபிப்ரவரி 18 – டோங் சோங் எனப்படும் ஒருங்கிணைக்கப்பட்ட சீனப்பள்ளிகளின் நிர்வாகக் குழுக்களின் சங்கம் நேற்று நடத்திய சீனப் புத்தாண்டு திறந்த இல்ல உபசரிப்பில் பிரதமர் நஜிப்பும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமும் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட சரித்திரபூர்வமான தருணம் நிகழாமலேயே போய்விட்டது.

காலை 10.30 மணியளவில் வந்து சேர்ந்த பிரதமர் அந்த நிகழ்வில் இருந்து வெளியேறிய பின்னர் ஒரு மணி நேரம் கழித்துத்தான் அன்வார் இப்ராகிம் அந்த விருந்துபசரிப்புக்கு வந்து சேர்ந்தார்.

அதே வேளையில் இந்த நிகழ்ச்சியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி பிரதமர் நஜிப் எந்தவித உரையும் நிகழ்த்தவில்லை. அன்வார் இப்ராகிமும் உரை எதுவும் நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

பிரதமரோடு ம.சீ.ச தலைவர் சுவா சோய் லெக், கெராக்கான் கட்சித் தலைவர் கோ சூ கூன் மற்றும் பல தேசிய முன்னணியைச் சேர்ந்த சீனத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சீன பாரம்பரிய சிவப்பு நிற சட்டை அணிந்து, குறிப்பிட்ட நேரத்திற்கு 15 நிமிடம் முன்னதாகவே வந்த பிரதமர் மேடைக்குச் சென்று “யீ சாங்” எனப்படும் அனைவரும் இணைந்து உணவருந்தும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

அன்வார் இப்ராகிமோடு லிம் கிட் சியாங்கும் மக்கள் கூட்டணியின் சீனத் தலைவர்களும் பிரதமர் வெளியேறிய பின்னர் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த விருந்துபசரிப்புக்கு வந்தனர்.

அவர்களும் சுமார் 45 நிமிடங்கள் அந்த நிகழ்வில் இருந்துவிட்டு சென்றனர். அன்வாரும் உரையேதும் ஆற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது பற்றி கருத்துரைத்த அன்வார் “எனக்கு கொடுக்கப்பட்ட நேரத்தின்படி நான் வந்து கலந்து கொண்டேன். மற்றபடி யாரையும் சந்திப்பதிலிருந்து தவிர்க்கவேண்டும் என்பது எனது நோக்கமல்ல” என்று கூறினார்.

நஜிப் இந்த நிகழ்வில் தான் பேசப் போவதில்லை என்று ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொண்டதாகவும் அதனைத் தொடர்ந்து அன்வார் இப்ராகிமிற்கும் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும் அறியப்படுகின்றது.