Home இந்தியா எத்தகைய சவால்களையும் முறியடிப்போம் – அருண் ஜெட்லி!

எத்தகைய சவால்களையும் முறியடிப்போம் – அருண் ஜெட்லி!

578
0
SHARE
Ad

arun-jaitley,ஸ்ரீநகர், ஜூன் 16 – ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து ஆராய்வதற்காக ராணுவ தலைமைத் தளபதி விக்ரம் சிங்குடன், ஸ்ரீநகருக்கு அருண் ஜெட்லி கடந்த சனிக்கிழமை வந்தார்.

ஸ்ரீநகரில் ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர் எல்லைப் பகுதியை ஒட்டிய இடங்களுக்கு சென்று ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடினார்.

எல்லைப் பகுதியில் அத்துமீறல்களை நிறுத்தினால் மட்டுமே பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று மத்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக அருண் ஜேட்லி கூறியதாவது, “ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் வேளையிலும், அந்நாட்டுடன் இந்தியா அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துமா? எனக் கேட்கிறீர்கள்.

நிச்சயம் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது. எல்லையில் அத்துமீறல்கள் மற்றும் ஊடுருவல்கள் தொடர்ந்தால், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் பயனில்லை.

ஆதலால்,இயல்புநிலை திரும்ப வேண்டுமானால் எல்லையில் நடைபெற்றுவரும் இதுபோன்ற அத்துமீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். அதன் பிறகுதான் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

ஜம்மு-காஷ்மீர் நிலவரம் குறித்து மாநில ஆளுநர் என்.என். வோரா, முதல்வர் ஒமர் அப்துல்லா மற்றும் மூத்த ராணுவ அதிகாரிகள், பாதுகாப்பு படையினருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினேன்.

அப்போது, அவர்களுடன் எல்லைக்கு அப்பாலிருந்து தீவிரவாதிகள் அல்லது ஊடுருவல்காரர்கள் வருவது குறித்து பேசினேன். எல்லைப் பகுதி நெடுகிலும் போர் நிறுத்தத்தை மீறும் வகையில் அத்துமீறல்கள் நடைபெற்று வருகின்றன.

அதற்கு எல்லையில் உள்ள நமது நாட்டு பாதுகாப்புப் படையினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். எல்லைப் பகுதியில் எத்தகைய அத்துமீறல்கள் நடைபெற்றாலும் அவற்றை முறியடிக்க நமது வீரர்கள் முழு அளவில் தயாராக இருக்கின்றனர்.

நமது வீரர்களின் செயல்பாடுகள் திருப்தியளிக்கும் வகையில் உள்ளன. ஆகவே, எத்தகைய சக்தியாலும் நாட்டில் அமைதியை சீர்குலைக்க முடியாது. எத்தகைய சவால்களையும் முறியடிக்கும் சக்தி நாட்டுக்கு உள்ளது என்று மேலும் அருண் ஜெட்லி கூறினார்.