Home நாடு “மா செயல்படத் தொடங்கும் முன்பே குறை கூறுவது தவறு” – இந்துதர்ம மாமன்றம் கருத்து! (பிரத்தியேக...

“மா செயல்படத் தொடங்கும் முன்பே குறை கூறுவது தவறு” – இந்துதர்ம மாமன்றம் கருத்து! (பிரத்தியேக நேர்காணல்)

614
0
SHARE
Ad

 

ZOE_0003

கோலாலம்பூர், ஜூலை 8 – தேசிய இந்து அறவாரியத்தின் தலைவராக டத்தோ மா சியூ கியோங் நியமிக்கப்பட்ட விவகாரத்தில், நாடெங்கிலும் பல்வேறு தரப்புகளிலிருந்து எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், மா சியூ கியோங்கிற்கு ஒரு வாய்ப்பு அளித்துப் பார்க்க வேண்டும் என்றும், அவர் செயல்படத் தொடங்கும் முன்பே சரியில்லை என்று கூறுவது தவறு என்றும் மலேசிய இந்துதர்ம மாமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்து அறவாரியத்தை மேற்பார்வையிட இந்தியர்களில் தகுதியானவர்கள்  யாருமில்லையா?” என்று பினாங்கு துணைமுதல்வர் (2) பேராசிரியர் இராமசாமி உட்பட பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த நியமனம் இந்துக்களை அவமதிப்பது போன்றதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்துரைத்த மலேசிய இந்துதர்ம மாமன்றத்தின் தேசியப் பொதுச் செயலாளர் ரிஷிகுமார் (படம்), மா தலைமையிலான இந்து அறவாரியம் அமைத்திருப்பது மலேசிய இந்துக்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று என்றும், இதை ஒரு வெற்றியாக தாங்கள் பார்ப்பதாகவும் நேற்று செல்லியலுக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் கூறியுள்ளார்.

“டத்தோ மா சியூ கியோகின் நியமனம் சரியா? இல்லையா?  என்பதை அவர் வேலை செய்த பின்பு தான் கூற முடியும். இந்த அறவாரியத்தின் முழு விபரங்களும் முதலில் தெரிய வேண்டும். யார் யார் இதில் செயல்படப் போகிறார்கள் என்று தெரிவதற்கு முன்பே இது சரியாக வராது என்று குறை கூறுவது மிகவும் தவறான ஒன்று” என்று ரிஷிகுமார் தெரிவித்தார்.

மேலும், கெராக்கான் கட்சியில் பல்வேறு இன மக்களும் இருக்கின்றனர். அதில் இந்தியர்களும் உள்ளனர். எனவே அதையெல்லாம் கருத்தில் கொண்டு தான் அவரை அரசாங்கம் நியமனம் செய்துள்ளது என்று தாங்கள் நம்புவதாகவும் ரிஷிகுமார் கூறினார்.

இந்த விவகாரத்தில் நாட்டிலுள்ள பல்வேறு இந்து சங்கங்களிடையே நிலவும் வெவ்வேறான கருத்துகள் குறித்த செல்லியலின் கேள்விக்குப் பதிலளித்த ரிஷிகுமார், இந்து இயக்கங்கள் அனைத்தும் ஒற்றுமையாக ஒரு குடையின் கீழ் இயங்கி, கலந்தாலோசித்து இந்த விவகாரத்தை அணுக வேண்டும் என்றும், மா நிச்சயமாக தொலைநோக்குப் பார்வையுடன் செயல்படும் அமைச்சராகத் தான் இருப்பார் என்றும் தெரிவித்தார்.

முதலில் மா தனது பொறுப்பில் இருந்து செயல்படட்டும், ஒருவேளை அவரது செயல்பாடுகள் திருப்பி அளிக்கவில்லை என்றால், பிறகு நமது எதிர்ப்பை காட்டுவதற்கு உரிமை உள்ளது என்றும் ரிஷிகுமார் குறிப்பிட்டார்.

செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்

ரிஷிகுமார் அவர்களின் முழு நேர்காணலையும் கீழே காணொளி வழியாகக் காணலாம்:-