அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது, “ரமலான் என்று அழைக்கப்படும் நோன்புக் காலம் இஸ்லாமியர்களின் வசந்த காலமாகும். நோன்பிருத்தல் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். நோன்பிருத்தல் இறைவனின் அளவற்ற அன்பையும் அருளையும் பெற்றுத் தருகிறது.
ரமலான் மாதத்தில் கண்ணியமாக நோன்பு நோற்றவர்கள் மட்டுமே சொர்க்கத்தில் உள்ள ரய்யான் என்ற வாசல் வழியாக அனுமதிக்கப்படுவார்கள் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாம் என்பது நல்வழி மார்க்கமாகும்.
நற்பண்புகளை மட்டும் போதிக்காமல் தீயவர்களையும் நல்வழிப்படுத்தியவர் நபிகள் நாயகம். நபிகள் நாயகத்தின் போதனைகளை அனைவரும் கடைப்பிடித்து வாழ்ந்தால், இந்தியா அமைதிப் பூங்காவாக விளங்கும்” என்று கூறினார் முதல்வர் ஜெயலலிதா.