அமெரிக்காவில் அர்கான்சாஸ் மாநிலத்தின் வடகிழக்கே ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இருந்து நச்சு திரவ ரசாயனத்தை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒரு சரக்கு ரயில் புறப்பட்டது.
அதே நேரம், மற்றொரு சரக்கு ரயில் கழிவு ரசாயனத்தை ஏற்றி கொண்டு அந்த தொழிற்சாலைக்குத் திரும்பி கொண்டிருந்தது. இந்த 2 சரக்கு ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் வந்ததால், ஹாக்சி என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
ரயில்களின் மோதலை தொடர்ந்து, வேகன்களில் இருந்த நச்சு ரசாயனங்கள் கசிந்தன. இதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அர்கன்சாஸ் போலீசாரும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்றனர்.
அப்பகுதியில் வசித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றினார்கள். பின்னர், சரக்கு ரயில்களில் இருந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்தில் சரக்கு ரயில்களில் இருந்த 2 ஊழியர்கள் பலியானார்கள். மேலும் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஒரே பாதையில் 2 சரக்கு ரயில்களும் வந்ததற்கான காரணம் பற்றி விசாரணை நடக்கிறது என்று அர்கன்சாஸ் போலீசார் தெரிவித்தனர்.