Home உலகம் போதைப் பொருள் வழக்கில் ஜாக்கி சான் மகன் கைது!

போதைப் பொருள் வழக்கில் ஜாக்கி சான் மகன் கைது!

741
0
SHARE
Ad

பெய்ஜிங், ஆகஸ்ட் 19 – நேற்று இரவு பிரபல நடிகர் ஜாக்கி ஜானின் மகன் ஜெய்சி சானையும் (வயது 32), தாய்வான் நடிகர் கை கோவையும் (வயது 23), சீனாவின் பெய்ஜிங் நகர் காவல்துறை, போதைப் பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்துள்ளது.

ஜெய்சியும், கோவும் மாரிஜுவானா என்ற போதை வஸ்துவை உட்கொண்டிருக்கிறார்கள் என்பதும் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

chan

#TamilSchoolmychoice

(இடது – ஜெய்சி சான் ; வலது – தாய்வான் நடிகர் கை கோ)

மேலும், ஜெய்சி சான் தங்கியிருந்த இடத்திலிருந்து 100 கிராமுக்கும் அதிகமான மாரிஜூவானா போதை வஸ்துக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வளர்ந்தவரான ஜெய்சி சான், தனது தந்தை ஜாக்கி சான் போலவே சினிமா துறையில் கால் பதித்தார். ஆனால் தொடர் தோல்விகளால் தனது தந்தையுடனான நல் உறவை கெடுத்துக் கொண்டதாகக் கூறப்பட்டது.

கடந்த 2011 -ம் ஆண்டு, ஜாக்கி சான் தனது பெயரில் உள்ள சொத்துக்களை தனக்குப் பிறகு உலகமெங்கும் உள்ள பொதுநல அமைப்புகளுக்கு எழுதி வைப்பதாகவும், அதில் தனது மகனுக்கு பங்கு கிடையாது என்றும் பொதுவில் அறிவித்தார்.

jaycee-chan

“அவருக்கு திறமை இருந்தால் நிச்சயம் தனக்கான சொத்தை சேர்த்துக் கொள்வார். ஒருவேளை முடியாவிட்டால் நிச்சயம் எனது சொத்தை தான் வீணடிக்கப் போகிறார்” என்று சிங்கப்பூரின் சேனல் நியூஸ் ஏசியா செய்தி நிறுவனத்திடம் ஜாக்கி சான் தெரிவித்தார்.

கடந்த 2009 -ம் ஆண்டு, போதை மருந்துக்கு எதிரான போராட்டத்தின் தூதுவராக சீன அரசாங்கத்தால் ஜாக்கி சான் நியமிக்கப்பட்டார்.

அப்போது, தனது மகன் எப்போதாவது தவறான வழிக்கு சென்றால், நிச்சயம் அவர் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறையிடம் தெரிவித்தார்.

ஒழுக்கமான வாழ்க்கை முறையாலும், திறமையான நடிப்பாலும் உலகெங்கும் ரசிகர்களுக்கு ஒரு முன் உதாரணமாகத் திகழும் நடிகர் ஜாக்கி சான், தனது மகன் வளர்ப்பு விஷயத்தில் தோல்வியையே சந்தித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தையே ஏற்படுத்தியுள்ளது.