Home நாடு பிரதமரும், துணைப் பிரதமரும் முரண்பட்ட கருத்துகள்

பிரதமரும், துணைப் பிரதமரும் முரண்பட்ட கருத்துகள்

608
0
SHARE
Ad

naji-1பெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 10 – தேச நிந்தனைச் சட்டம் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என அறைகூவல்கள் விடுத்து வரும் வரும் வேளையில் இது தொடர்பில் பிரதமர் நஜீப் துன் ரசாக் வெளியிடுகின்ற கருத்தும், துணைப் பிரதமர் மொய்தீன் யாசின் வெளியிடும் கருத்தும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கின்றது.

தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்யப்படுவது தொடர்பில் பிரதமரும், துணைப்  பிரதமரும் விடுத்துவரும் முரண்பாடான அறிக்கைகளால் “இவ்விருவரில் யார் பிரதமர்?” என்ற கேள்வியை பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் அஸ்மின் அலி எழுப்பியுள்ளார்.

ஜெர்லுன் அம்னோ தொகுதிக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக், தேசிய நிந்தனைச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்தார். இரண்டு தினங்களுக்குப் பின்னர் பேசிய துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொய்தீன் யாசின், தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்வதற்கு அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

#TamilSchoolmychoice

நாட்டின் 13-வது பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் சமயத்தில் 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்யப்படும் என பிரதமர் நஜிப் முதன்முதலாக வாக்குறுதியளித்தார். பொதுத் தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக மலேசியர்களை அவர் அந்தச் சமயத்தில் இந்த அறிக்கையை விடுத்தார்.

ஆனால், ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை அதற்கான எந்தவித முயற்சிகளையும் அவர் எடுக்கவில்லை.

தொடர்ந்து, 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் பிபிசி தொலைக்காட்சிக்கு அளித்த ஒரு நேர்காணலில், நஜிப் மீண்டும் அதே வாக்குறுதியைத் தந்தார். தொடந்து, 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் தேதி அச்சட்டம் ரத்து செய்யப்படும் என்று ஒரு பத்திரிகை அறிக்கை வழி பிரதமர் இலாகா உறுதிப்படுத்தியது.

azmin-ali1மீண்டும் செப்டம்பர் 5-ம் தேதி தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று பிரதமர் உறுதிப்படுத்தினார்.

ஆனால், அதற்கு இரண்டு தினங்களுக்கு பின்னர் பத்து அம்னோ தொகுதிக் கூட்டத்தில் பேசிய துணைப் பிரதமர்  மொய்தீன் யாசின்  தேச நிந்தனைச் சட்டம் ரத்து செய்வதற்கு அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை என்று கூறினார்.

முரண்பட்ட அறிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது தேசிய முன்னணி அரசாங்கத்திலேயே, தேச நிந்தனை சட்டம் குறித்த மாறுபட்ட கருத்துகள் உலவுவது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான், யார் மலேசியாவின் பிரதமர்? நஜிப்பா? மொய்தீனா? என்று பிகேஆர்  தேசியத் துணைத் தலைவர் அஸ்மின் அலி கேள்வியெழுப்பியுள்ளார்.