ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள ‘ஐ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்திருந்தார் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு.
சென்னை வந்த அர்னால்டு உடற்பயிற்சி செய்வதற்காக உடல்பயிற்சி கூடத்திற்கு சென்றார். அங்கு அவர் நடிகர் சூர்யாவைச் சந்தித்தாராம். முன்னதாக தங்கும் விடுதி அறையில் அதிகாலை சுமார் ஐந்தரை மணியளவில் இட்லி, தோசை போன்றவற்றைச் சாப்பிட்டாராம் அர்னால்டு.
இது தொடர்பாக சூர்யா செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், “உடற்பயிற்சி கூடத்தில் அர்னால்டை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. என் முன்னால் அவர் நின்று கொண்டிருந்ததை நம்பவே முடியவில்லை.நான் மட்டுமின்றி எல்லோருமே அர்னால்டு ரசிகர்கள்தான். அவரிடம் சென்னை வந்ததற்கு நன்றி என்றேன். சிரித்தபடி எனக்கு நன்றி சொன்னார்” என்று சூர்யா தெரிவித்துள்ளார்.
தனது 15 வயது முதற்கொண்டு தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு வரும் அர்னால்டு, 20 வயதில் “மிஸ்டர் யுனிவர்ஸ்” பட்டம் பெற்றவர். மேலும், உடற்பயிற்சி பற்றி நிறைய புத்தகங்களும் அவர் எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.