Home வணிகம்/தொழில் நுட்பம் மலாயன் வங்கி, மியன்மாரில் செயல்படப் போகும் முதல் மலேசிய வங்கி!

மலாயன் வங்கி, மியன்மாரில் செயல்படப் போகும் முதல் மலேசிய வங்கி!

489
0
SHARE
Ad

TKMaybankBranchயாங்கூன், அக்டோபர் 02 – மியான்மரில் மலாயன் வங்கி (மேபேங்க்), ஒசிபிசி வங்கி உட்பட ஒன்பது வெளிநாட்டு வங்கிகள் செயல்பட அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

பல வருடங்களாக இராணுவ ஆட்சி செயல்படுத்தப்பட்டு வந்த மியான்மரில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் குறைந்தபட்ச குடியியல் உரிமைகள் பெற்ற அரசாக மாறியது. இராணுவ ஆட்சி காரணமாக உலக நாடுகளால் தனிமைப்படுத்தப்பட்டு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அந்நாட்டை சீர்தூக்கும் முயற்சியில் புதிய அரசு இறங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஒன்பது வெளிநாட்டு வங்கிகளை தங்கள் நாட்டில் செயல்பட மியான்மர் மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது. எனினும், வங்கிகளின் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டதாகவே உள்ளன.

#TamilSchoolmychoice

ஆசிய பசிபிக் வட்டாரங்களில் செயல்படும் ‘ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து வங்கி’ (ANZ Bank), சீனாவின் ‘தொழில் மற்றும் வணிக வங்கி’ (Industrial and Commercial Bank), ஜப்பானின் ‘டோக்கியோ மிட்சுபிஷி வங்கி’, (Mitsubishi UFJ Bank), ‘சுமிடோமோ மிட்சுயி வங்கி’ (Sumitomo Mitsui Bank), ‘மிஷுஹோ வங்கி’ (Mizuho Bank), தாய்லாந்தின் ‘பாங்காக் வங்கி’ (Bangkok Bank), சிங்கப்பூரின் ‘ஓவர்சீ- சைனீஸ் வங்கி’ (Oversea-Chinese Bank) மற்றும் ‘யுனைடெட் ஓவர்சீஸ் வங்கி’ (United Overseas Bank) மற்றும் மலேசியாவின் மிகப் பெரும் வங்கியான மலாயன் வங்கி (May Bank) போன்ற வங்கிகளுக்கு இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மியான்மாரில் செயல்படப் போகும் முதல் மலேசிய வங்கி மேபேங்க் வங்கியாகும்.

இது குறித்து மியான்மரின் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மியான்மர் நாட்டின் நிதித்துறை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் இந்த வங்கிகள் ஈடுபடும். எனினும், முதல் 12 மாதங்களில் வங்கிகளின் செயல்பாடுகளை பார்த்த பின்னரே அவற்றுக்கான நிரந்தர அனுமதி வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.

புதிய ஆட்சியில் பெரும்பாலான சர்வதேசத் தடைகள் அகற்றப்பட்டுள்ளன. இதனால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் மறுமலர்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.