Home உலகம் ஐஎஸ்ஐஎஸ் உடன் கைகோர்க்கும் தலிபான்கள்! 

ஐஎஸ்ஐஎஸ் உடன் கைகோர்க்கும் தலிபான்கள்! 

538
0
SHARE
Ad

ISIS இஸ்லாமாபாத், அக்டோபர் 6 – உலகை அச்சுறுத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன், பாகிஸ்தானின் தலீபான்கள் இயக்கமும் கைகோர்த்து இருப்பதாக அதிர்ச்சித்  தகவல் வெளியாகி உள்ளது.

ஈராக் மற்றும் சிரியாவை இணைத்து இஸ்லாமிய நாடாக மாற்ற ஆயுதப் போராட்டம் நடத்தி வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றனர்.

அவர்களின் ஆதிக்கத்தை தடுத்து அழிப்பதில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அரபு நாடுகள் கூட்டணியாக ஈடுபட்டு வருகின்றன. அவர்களின் நிலைகளின் மீது அமெரிக்க இராணுவம் குண்டு வீசி அழித்து வருகின்றது. அதனால் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு உதவும் வகையில் பாகிஸ்தானின் தலிபான் தீவிரவாதிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் ஷாகி துல்லா ஷாகித் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் கூறியுள்ளதாவது:-

“நம் எதிரிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைத்து எதிர்க்கின்றனர். நீங்கள் எங்களது சகோதரர்கள் உங்களது வெற்றியால் நாங்கள் பெருமைப்படுகிறோம். நாங்கள் எப்போதும் உங்களுடன் இருக்கிறோம். உங்களின் மகிழ்ச்சியிலும், துக்கத்திலும் துணை நிற்போம். பிரச்சினைக்குரிய காலங்களில் உங்களுக்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருப்போம்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே ஈராக் மற்றும் சிரியாவிற்கு தலிபான்கள் விரைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் அல்கொய்தா மற்றும் தலிபான்களை தொடர்ந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பும் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானின், பெஷாவரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு குறித்த ஆதரவு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஐஎஸ்ஐஎஸ்-ன் பாதிப்பு இந்தியாவில் எதிரொலிக்கும் என ஐஎஸ்ஐஎஸ்-ன் தலைவன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.