Home உலகம் மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் தீவிரவாதத் தாக்குதல் – 40 பேர் பலி!

மாஸ்கோ இசை நிகழ்ச்சியில் தீவிரவாதத் தாக்குதல் – 40 பேர் பலி!

158
0
SHARE
Ad

மாஸ்கோ : ரஷியத் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் தீவிரவாதிகள் நுழைந்து துப்பாக்கிச் சூடுகள் நடத்தியதிலும் வெடிகுண்டுகளை வீசியதிலும் 40 பேர் உயிரிழந்தனர். 145-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உடனடியாக, இஸ்லாமிக் ஸ்டேட் என்னும் தீவிரவாத இயக்கம் இந்தத் தாக்குதலுக்குத் தாங்களே காரணம் என அறிவித்தது.

இந்தத் தாக்குதலில் தங்களுக்கு சம்பந்தமில்லை என ரஷியாவுடன் போரில் ஈடுபட்டிருக்கும் உக்ரேன் தெரிவித்தது.

ஆயுதம் தாங்கிய குழுவினர், புகைமூட்டத்தைத் தற்காக்கும் பாதுகாப்பு கவச ஆடைகளுடன் குரோகஸ் சிட்டி ஹால் என்ற அரங்கத்தில் வெள்ளிக்கிழமை (மார்ச் 22) இரவு இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்.

#TamilSchoolmychoice

துப்பாக்கிகளால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் அவர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து அரங்கத்தைச் சுற்றி கரும்புகையுடன் புகைமூட்டம் சூழ்ந்தது.

அண்மைய ஆண்டுகளில் ரஷியாவில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இது கருதப்படுகிறது.

கடந்த மார்ச் 17-ஆம் தேதி மீண்டும் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட விளாடிமிர் புடினுக்கு இந்தத் தாக்குதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு இந்தத் தாக்குதல் ஒரு பெரும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.