இஸ்தான்புல்: அனைத்துலக அரசியல் அரங்கில் எதிர்பாராத – நம்ப முடியாத – சில அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. 2022 முதல் போரில் ஈடுபட்டிருக்கும் ரஷியாவும், உக்ரேனும் இன்று வெள்ளிக்கிழமை (மே 16) முதன் முறையாக நேரடிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. 3 ஆண்டுகாலப் போரில் இது முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்பட்டாலும் அந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் போர் நிறுத்தம் எதுவும் ஏற்படவில்லை.
எதிர்பார்த்தபடி, ரஷிய அதிபர் புடினும், உக்ரேன் அதிபர் செலன்ஸ்கியும் இந்தப் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. துருக்கிய அதிபர் எர்டோகன் இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு முக்கியப் பங்காற்றியுள்ளார்.
அதே வேளையில், பல்லாண்டு காலமாக மோதலில் ஈடுபட்ட வந்த சிரியாவும் இஸ்ரேலும் நேரடி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சவுதி அரேபிய வருகையின்போது சிரியாவின் புதிய அதிபர் அகமட் அல் ஷாராவைச் சந்தித்தார். அதைத் தொடர்ந்தே இஸ்ரேல் சிரியாவுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளது.