Home உலகம் மோதலை நிறுத்துங்கள் – நவாஸ் ஷெரீப் இந்தியாவிடம் வலியுறுத்தல்!  

மோதலை நிறுத்துங்கள் – நவாஸ் ஷெரீப் இந்தியாவிடம் வலியுறுத்தல்!  

368
0
SHARE
Ad

nawaz_sharifஇஸ்லாமாபாத், அக்டோபர் 11 – இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் கடும் மோதல் நடந்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், மோதல் போக்கை கைவிடும் படி இந்தியாவிடம் வலியுறுத்தி உள்ளதாகத்  தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளும் காஷ்மீர் எல்லைப் பகுதியில், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வரும் நிலையில், இரு நாடுகளுக்கிடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரம் குறித்து ஐ.நா.வும், அமெரிக்காவும் கவலை தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு உயர்மட்ட குழுவின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் நடைபெற்றது.

#TamilSchoolmychoice

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம், உள்துறை, நிதித்துறையை சேர்ந்த அமைச்சர்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐ அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு எல்லையோர மோதல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைதியை விரும்பும் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை யாரும் தவறாக புரிந்துக் கொள்ளக் கூடாது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் புனிதத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும், நீடித்த அமைதியை நிலைக்கச் செய்யும் விதத்திலும் எல்லைப்பகுதியில் நடத்தப்படும் துப்பாக்கிச் சூட்டை இந்தியா உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார்.

எனினும் இந்தியத் தரப்பு அதிகாரிகள் இது தொடர்பாக கூறுகையில், “கடந்த 1-ம் தேதி முதல் பாகிஸ்தான் இராணுவம் தான் தொடர் அத்துமீறலை நடத்தி வருகின்றது. அதற்குத் தகுந்த பதிலடியை இந்திய இராணுவம் கொடுத்து வருகின்றது” என்று கூறியுள்ளனர்.