Home நாடு அன்வார் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாணவர் தலைவர் மீது பல்கலைக் கழகம் 9 குற்றச்சாட்டுகள்!

அன்வார் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த மாணவர் தலைவர் மீது பல்கலைக் கழகம் 9 குற்றச்சாட்டுகள்!

390
0
SHARE
Ad

Fahmi-Zainol UMகோலாலம்பூர், நவம்பர் 1 – அண்மையில் மலாயாப் பல்கலைக் கழக வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட அன்வார் இப்ராகிமின் உரை தொடர்பான சம்பவத்தின் மூலம் ஒரு புதிய துணிச்சலான இளைய தலைமுறைத் தலைவர் ஒருவர் உருவாகியுள்ளார்.

அவர்தான் மலாயாப் பல்கலைக் கழக மாணவர் தலைவர் ஃபாமி சைனோல் (படம்).

அவரது துணிச்சல், அன்வார் இப்ராகிம் உட்பட அனைவராலும் பாராட்டப்பட்ட வேளையில், மலாயாப் பல்கலைக் கழக நிர்வாகம் ஃபாமி மீது 9 குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

#TamilSchoolmychoice

அன்வார் இப்ராகிமின் உரையை முன்னின்று ஏற்பாடு செய்த காரணத்திற்காக இந்த குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கியுள்ளார்.

நேற்று இந்த குற்றச்சாட்டுகள் அடங்கிய கடிதத்தை ஃபாமி பெற்றுள்ளார். எதிர்வரும் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் விசாரணைக்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

ஃபாமியோடு சேர்த்து மேலும் 8 பேர் இதேபோன்ற கடிதங்களை பல்கலைக் கழக நிர்வாகத்திடமிருந்து பெற்றுள்ளனர்.

Anwar Ibrahim

பல்கலைக் கழக வளாகத்தில் அன்வார் உரையாற்றிய போது…

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி மலாயாப் பல்கலைக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அன்வார் இப்ராகிமின் உரை, சட்டவிரோதமானது என்று கூறி, பல்கலைக் கழகத்தின் பிரதான வாயில்களை நிர்வாகம் மூடியது.

ஆனால், அன்வார் உரையைக் கேட்க குழுமிய சுமார் இரண்டாயிரம் மாணவர்கள், வாயில் கதவுகளை உடைத்துக் கொண்டு முன்னேறினர்.

அன்வார் பல்கலைக் கழகத்தில் நுழைந்தபோது அந்த வளாகத்தின் மின் விளக்குகளும், வளாகத்தின் உள்ளே இருந்த தெருவிளக்குகளும் வேண்டுமென்ற அணைக்கப்பட்டன.