Home இந்தியா மீண்டும் த.மா.கா. உதயமாகிறதா? நவம்பர் 3இல் வாசன் முக்கிய அறிவிப்பு!

மீண்டும் த.மா.கா. உதயமாகிறதா? நவம்பர் 3இல் வாசன் முக்கிய அறிவிப்பு!

564
0
SHARE
Ad

GK Vasanசென்னை, நவம்பர் 2 – தமிழக சட்டமன்றத் தேர்தல்  2016ஆம் ஆண்டில் நடைபெறுவதை முன்னிட்டு, தமிழக தேர்தல் களத்தில் இப்போதே அரசியல் காட்சிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

தனது அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 3ஆம் தேதி அறிவிக்க இருப்பதாக  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் வாசன். அப்போது காங்கிரஸ் தலைமை குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.

#TamilSchoolmychoice

“நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தமிழக காங்கிரசை கட்சி மேலிடம் கவனிக்கவில்லை. இதுநாள் வரை பாராமுகமாகவே இருந்து வருகிறது. கட்சித் தொண்டர்கள் மற்றும் மாநில உணர்வுகளை காங்கிரஸ் தலைமை புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை,” என்றார் வாசன்.

அடுத்து தனிக்கட்சி தொடங்க திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், “இது குறித்து 3ஆம் தேதி எனது அறிவிப்பை வெளியிடுவேன். அதன் பிறகு எனது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரிய வரும்,” என்றார்.

தமிழக காங்கிரசில் தற்போது உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது. உறுப்பினர்களுக்கான அட்டையில் மறைந்த முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் உருவப்படம் இடம்பெற்றிருந்தது.

இது குறித்து சிலர் காங்கிரஸ் தலைமையிடம் முறையிட்டதாகவும், இதையடுத்து மூப்பனாரின் படத்தை உறுப்பினர் அட்டையிலிருந்து அகற்றுமாறு உத்தரவிடப்பட்டதாகவும் தெரிகிறது.

இதனால் வாசன் தரப்பு கடும் அதிருப்தி அடைந்த நிலையில், ஞானதேசிகன் தமிழக காங்கிரஸ் தலைவர் பதிவியிலிருந்து விலகினார். இந்நிலையில் வாசனை கலந்தாலோசிக்காமலேயே புதிய தலைவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வாசன் தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இது குறித்து 3ஆம் தேதி அவர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

வாசன் பிரிந்து சென்றால் அதனால் தமிழகத்தில் மக்கள் ஆதரவைப் பொறுத்தவரை ஏற்கனவே அதலப் பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கும் காங்கிரஸ் கட்சிக்குப் மேலும் பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.